கொரோனாவின் தாக்கம் உலகம் முழுக்க விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், உலகம் முழுக்க மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலையே நிலவி வருகின்றது.
இதன் காரணமாக மக்கள் தங்களது மொத்த வருவாயினை இழந்து தவித்து வரும் நிலையில், தங்களது அத்தியாவசியத் தேவைக்கு கூட பார்த்து பார்த்து செலவு செய்து வருகின்றனர்.
இது தான் இப்படி எனில், அப்படி அதையும் மீறி, அத்தியாவசியமற்ற ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றால், கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அது இங்கு மட்டும் அல்ல உலகம் முழுக்க அப்படித் தான். சரி உள்ளூரில் தான் விற்பனை செய்ய முடியவில்லை அயல் நாடுகளுக்காவது ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்றாலும், போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கம். ஆக அதனையும் செய்ய முடியாமல் நிறுவனங்கள் தவித்து வருகின்றன.
அதோடு மக்கள் வீட்டினை விட்டு வெளியே வர முடியாததால் உற்பத்தி ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இப்படி காத்து வாங்கிக் கொண்டு இருக்கும் ஆலைகள் ஒரு பக்கம், மறுபக்கம் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும் ஷோரூம்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் வாகன விற்பனைகள் முற்றிலும் முடங்கியுள்ளன.
இந்த நிலையில் இங்கிலாந்தினை சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனமான எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம், தனது இந்தியா ஆலைகளில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒரு வாகனத்தினை கூட விற்பனை செய்யவில்லை என அறிவித்துள்ளது. லாக்டவுனினால் ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளதால், இந்த நிறுவனம் இப்படி ஒரு பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் கடைசி வாரத்தில் ஹாலோலில் உள்ள அதன் ஆலையில் சிறிய அளவில் அதன் உற்பத்தியை தொடங்கியுள்ளதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது, மேலும் மே மாதத்தில் அதன் உற்பத்தியினை அதிகரிக்க முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.
மே 3- வுடன் லாக்டவுன் முடிவடைய இருக்கும் நிலையில், அதற்கு மேல் ஆவது, சில தளர்த்தல் இருக்குமா? அல்லது நீட்டிக்கப்படுமா? என்ற நிலையில் இதே போல ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு துறையிலும் பின்னடைவினை தான் சந்தித்து வருகின்றன. இதனால் ஒவ்வொரு துறையும் பெருத்த அடியினையே வாங்கி வருகின்றன.