இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றான எம்ஜி மோட்டார்ஸ் இந்திய நிறுவனங்கள் வர்த்தகம் இல்லாமல் தவித்து வந்த நிலையிலும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுத் தற்போது தவிர்க்க முடியாத நிறுவனமாக உயர்ந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் 2020 முதல் கொரோனா தொற்றுக் காரணமாக அதிகளவிலான வர்த்தகத் தடுமாற்றங்களைச் சந்தித்து வந்த சூழ்நிலையில், 2020ஆம் ஆண்டின் கடையில் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றுச் சரிவில் இருந்து மீண்டது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தனது தொழிற்சாலையை மூடிய நிலையில் தற்போது எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனமும் ஒரு வாரம் தனது தொழிற்சாலையை மூடியுள்ளது.
குஜராத் ஹலோல் தொழிற்சாலை
இந்திய கார் விற்பனை சந்தையில் மிகவும் கடினமான வர்த்தகச் சந்தையான எஸ்யூவி பிரிவில் ஹெக்டர் கார் அறிமுகத்தின் மூலம் பெரிய அளவிலான வர்த்தகத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றுக் காரணமாக ஊழியர்கள் நலன் கருதி குஜராத் மாநிலத்தின் ஹலோல் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையை மூட முடிவு செய்துள்ளது.
ஒரு வாரம் தொழிற்சாலை மூடல்
இதன் மூலம் வருகிற ஏப்ரல் 29 முதல் மே 5 வரையிலான காலத்திற்கு எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் குஜராத் தொழிற்சாலை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா-வின் தலைவர் ராஜீவ் சாபா-வும் உறுதி செய்துள்ளார்.
கொரோனா தொற்று
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில், மக்கள் மருத்துவமனையில் படுக்கை இல்லாமலும், ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமலும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வரும் விலையில் எம்ஜி மோட்டார்ஸ் போல் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலை தற்காலிகமாக மூடியுள்ளது.
ஹீரோமோட்டோ கார்ப்
இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக, இந்தியாவில் இருக்கும் தனது உற்பத்தி தொழிற்சாலைகள் அனைத்தையும் தற்காலிகமாக மூடியுள்ளது. இதன் மூலம் ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் உற்பத்தி பணிகள் மொத்தமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர்
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் ஏப்ரல் 26 முதல் மே 14 வரையிலான நாட்களுக்கு இந்தியாவில் இயங்கி வரும் இரு தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூட முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 26 முதல் மே 14 வரையிலான காலகட்டத்தில் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் பிடாடி தொழிற்சாலையில் கார் உற்பத்தி பணிகளை முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.