இந்தியாவில் கார் மற்றும் பைக் விற்பனை மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தால் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் உற்பத்தியைக் குறைத்து, ஊழியர்களைப் பணிநீக்கம் என மோசமான காலகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் சீனாவின் SAIC நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பிரிட்டன் நாட்டின் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த ஹெக்டார் மாடல் எஸ்யூவி கார் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் மற்ற எல்லா நிறுவனங்களும் விற்பனை இன்றித் தவித்துக்கொண்டு இருந்த நிலையில் எம்ஜி மோட்டார்ஸ் மற்றும் கியா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் விற்பனையில் பட்டையைக் கிளப்பியது மட்டும் அல்லாமல் ஆட்வான்ஸ் புக்கிங் எண்ணிக்கையிலும் சாதனை படித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தனது வர்த்தகத்தை மேம்படுத்த அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது எம்ஜி மோட்டார்ஸ்
SAIC மோட்டார்ஸ்
நாம் ஏற்கனவே கூறியது போல் எம்ஜி மோட்டார்ஸ் பிரிட்டன் நிறுவனமாக இருந்தாலும் இந்நிறுவனத்தைச் சீனாவின் அரசு ஆட்டோமொபைல் நிறுவனமான SAIC மோட்டார்ஸ் வாங்கியுள்ள நிலையில் இதன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இந்தியாவில் இதன் வளர்ச்சியைச் சற்றும் எதிர்பார்க்காத SAIC மோட்டார்ஸ் வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேகமாக அடுத்தடுத்த முடிவுகளை எடுத்து வருகிறது..
முதலீடு
SAIC மோட்டார்ஸ் இந்தியாவில் ஏற்கனவே கார் தயாரிப்புக்காகக் குஜராத் ஹலோல் பகுதியில் தொழிற்சாலை அமைத்து சுமார் 2000 கோடி ரூபாய் தொகையை ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது வர்த்தக விரிவாக்கத்திற்காகவும், புதிய கார் அறிமுகத்திற்காகவும் கூடுதலாக 3000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
3 புதிய மாடல்கள்
இதுமட்டும் அல்லாமல் ஜூலை 2021ஆம் ஆண்டுக்குள் புதிதாக 3 எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை வர்த்தகத் தலைவர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.
இதன் படி 2020இல் eZS என்கிற முழு எலக்ட்ரிக் ரக எஸ்யூவி காரை அறிமுகம் செய்யவும், 2020 முதல் பாதியில் 6 சீட்டர் கொண்ட ஹெக்டர் எஸ்யூவி காரையும், அதன் பின் 7 சீட்டர் கொண்ட Maxus D90 காரையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார்ஸ் மற்றும் SAIC மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.
சக போட்டியாளர்
எம்ஜி மோட்டார்ஸ் ஒரு பக்கம் பட்டையைக் கிளப்பிக்கொண்டு இருக்கும் வேளையில் இந்நிறுவனத்துடன் சமகாலத்தில் இந்தியாவில் அறிமுகமான கியா மோட்டார்ஸ் நிறுவனமும் இந்தியாவில் மிகவும் குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகச் சந்தையைப் பிடித்துள்ளது.
கியா மோட்டார்ஸ்
கியா மோட்டார்ஸ் நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 14,005 செல்டோஸ் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது விழாக்காலம் என்றாலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் அறிமுகமாகிய 4 மாதத்தில் தொடர்ந்து விற்பனையில் சாதனை வளர்ச்சியை மட்டுமே கண்டு உள்ளது.
4 மாத வளர்ச்சி
ஆகஸ்ட் 2019இல் அறிமுகம் செய்யப்பட்ட போதே 6,236 கார்களை விற்பனை செய்தது கியா மோட்டார்ஸ் 4 மாதத்தில் சுமார் 40,000 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் செப்டம்பர் மாதத்தில் 7,754 கார்களையும், ஆக்டோபர் மாதத்தில் 12,854 கார்களையும், நவம்பர் மாதத்தில் 14,005 கார்களையும் விற்று அசத்தியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் கடந்த 3 மாதத்தில் மட்டும் சுமார் 86,840 கார்களுக்கான ஆர்டர்களையும் கியா செல்டோஸ் பெற்றுள்ளது.