ஒசூரில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் பொம்மை தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக மைக்ரோ பிளாஸ்டிக் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
மைக்ரோ பிளாஸ்டிக் இந்தியா நிறுவனம், ஓசூரில் 7,00,000 சதுர அடி தொழில்துறை இடத்தை குத்தகைக்கு எடுத்து, இந்தியாவின் மிகப்பெரிய பொம்மை தயாரிப்பு ஆலையை அமைப்பதற்காக ரூ. 500 கோடி முதலீடு செய்கிறது. இந்த தொழிற்சாலை அமைப்பதற்காக இடத்தை குத்தகை எடுத்துக்கொடுக்கும் ஒப்பந்தத்தை, சொத்து ஆலோசகர் நிறுவனமான ஜேஎல்எல் இந்தியா செய்துகொடுத்துள்ளது.
புதிய வேலைவாய்ப்புகள்
பொம்மை உற்பத்தியில் ஆசியாவின் மிகப்பெரிய உற்பத்தி மையங்களில் ஒன்றாக நாடு மாறுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த தொழிற்சாலை மூலம் 6000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 300 சதவீத வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என மைக்ரோ பிளாஸ்டிக் லிமிடெட் நிர்வாக இயக்குனர் விஜேந்திர பாபு கூறியுள்ளார்.
மைக்ரோ பிளாஸ்டிக் இந்தியா லிமிட்டெட்
2005-ம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கப்பட்ட மைக்ரோ பிளாஸ்டிக் இந்தியா லிமிட்டெட் நிறுவனம், உயர்தர பிளாஸ்டிக் ஊசி, கருவிகள், விளையாட்டு உபகரணங்கள், மின் கருவிகள், மின் சாதனங்கள், மின்னணுவியல், தொலைத்தொடர்பு & கனரக பொறியியல் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. பல்வேறு அமெரிக்க, ஐரோப்பிய பொம்மை, விளையாட்டு உபகரனங்களின் உற்பத்தியாளராக உள்ளது. பெங்களூரிவில் மட்டும் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக 4 உற்பத்தி ஆலைகள் உள்ளன.
வருவாய்
மைக்ரோ பிளாஸ்டிக் இந்தியா நிறுவனம் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. அதில் 70 சதவீத வருவாய் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடிகளின் ஏற்றுமதி மூலம் கிடைப்பதாகக் கூறுகிறது.
இந்திய பொம்மை தொழில்துறை
இந்திய பொம்மை தொழில்துறை 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக உள்ளது. உலக சந்தை மதிப்பில் இது 0.5 சதவீதம் மட்டுமே. இந்தியாவில் பெரும்பாலான பொம்மை உற்பத்தியில் தமிழ்நாடு, கர்நாடகா, மும்பை, டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சிறு நகரங்களில் தான் நடைபெறுகிறது.
இந்தியாவில் மொத்தமாக 8,366 பதிவு செய்யப்பட்ட மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) பொம்மை உற்பத்தி செய்துவருகின்றன.