இந்தியாவில் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது அனைவருக்கும் தெரியும், குறிப்பாகப் பின்டெக் துறையில் இருக்கும் நிறுவனங்களின் வர்த்தகம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஏற்கனவே பல முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் பின்டெக் துறையில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது முன்னணி டெக் நிறுவனங்களின் பெரும் தலைகள் முதலீடு செய்யத் துவங்கியுள்ளது.
பெங்களூர் Groww
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Groww நிறுவனம் தற்போது டைகர் குளோபல் என்னும் பிரபலமான முதலீட்டு நிறுவனத்தின் அதிகப்படியான முதலீட்டில் இயங்கி வரும் நிலையில், இந்நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வான சத்ய நாடெல்லா தனது சொந்த பணத்தை முதலீடு செய்துள்ளார்.
முதலீட்டு நிறுவனம்
பொதுவாகப் பெரு நிறுவனங்களின் தலைவர்கள் சொந்தமாக முதலீட்டு நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் முதலீடு செய்வது வழக்கம், உதாரணமாக இன்போசிஸ் நாராணயமூர்த்தி-க்கு கட்டமரான், விப்ரோ அசிம் பிரேம்ஜி-க்கு பிரேம்ஜி இன்வெஸ்ட்.
மைக்ரோசாப்ட் நிறுவனம்
இப்படி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக விளங்கும் சத்ய நாடெல்லா தனது சொந்த பணத்தின் வாயிலாகப் பெங்களூர் Groww நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்திற்கு ஆலோசகராகவும் செயல்பட உள்ளார்.
Groww சிஇஓ
இதுகுறித்து க்ரோ நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வான லலித் கேஷ்ரே தனது டிவிட்டரில் Groww உலகின் சிறந்த CEO களில் ஒருவரை முதலீட்டாளராகவும், ஆலோசகராகவும் பெற்றுள்ளது. இந்தியாவில் நிதிச் சேவைகளை அணுகக்கூடியதாக மாற்றும் எங்கள் பணியில் சத்ய நாடெல்லா இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
சத்ய நாடெல்லா
சத்ய நாடெல்லா க்ரோ நிறுவனத்தில் எவ்வளவு தொகையை முதலீடு செய்துள்ளார் என்பதை அறிவிக்கவில்லை. ஆனால் 2021 அக்டோபர் மாதம் Groww நிறுவனம் சுமார் 251 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்று முதல் முறையாக 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெற்றது.