உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தனது கேமிங் பிரிவான 'எக்ஸ்பாக்ஸ்' (Xbox) நிறுவனத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறி 4,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெக் நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளாகவே பல காரணங்களை கூறி தொடர்ச்சியாக ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. ஏஐ பயன்பாடு அதிகரிப்பு, நிறுவன சீரமைப்பு , சிக்கன நடவடிக்கை உள்ளிட்டவற்றை தான் பெரும்பாலான நிறுவனங்கள் காரணமாக முன் வைக்கின்றன. அந்த வகையில் மைக்ரோசாஃப்ட் நிறுவன மறுசீரமைப்பு என்ற பெயரில் எக்ஸ்பாக்ஸ் பிரிவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நிறுவனத்தின் செலவுகளை குறைக்கவும், செயல்பாடுகளை மேம்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, கேமிங் துறையில் மைக்ரோசாஃப்ட் செய்த முதலீடுகளுக்கு ஏற்ற வருவாய் கிடைக்கவில்லை. இதுவே நிறுவன மறுசீரமைப்புக்கு காரணம்.
மைக்ரோசாஃப்ட் தனது மொத்த பணியாளர்களில் சுமார் 2.1% பேரை அதாவது 4,800 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. இதில் எக்ஸ்பாக்ஸ் பிரிவில் மட்டும் 3,200 ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். எக்ஸ்பாக்ஸ் பிரிவின் புதிய தலைவரான ஆஷா சர்மா, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் 2027 நிதியாண்டு வரை தொடரும் என தெரிவித்துள்ளார்.
பணிநீக்கம் தொடரும் என்பதை தான் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார் என சொல்லப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் கேமிங் தளங்களுக்காக 20 பில்லியன் டாலரை மைக்ரோசாஃப்ட் முதலீடு செய்தும், வருவாய் எதிர்பார்த்தபடி இல்லை என நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. நிஞ்ஜா தியரி (Ninja Theory), காம்பல்ஷன் கேம்ஸ் (Compulsion Games) போன்ற புகழ்பெற்ற கேமிங் ஸ்டுடியோக்கள் இந்த மறுசீரமைப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில மூடப்படலாம் அல்லது வேறு நிறுவனங்களுக்கு விற்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைக்ரோசாஃப்ட் மூத்த அதிகாரி ஏமி கோல்மேன், இந்த முடிவுகள் மிகவும் கடினமானவை என்றும், தொழில்நுட்ப உலகம் மிக வேகமாக மாறி வருவதால் இத்தகைய மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்றும் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த பணிநீக்கங்களுக்கு AI தொழில்நுட்பம் ஒரு காரணம் அல்ல என்றும், கேமிங் பிரிவின் லாபத்தை உயர்த்தவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு 'ஆக்டிவிஷன் பிளிஸார்ட்' (Activision Blizzard) நிறுவனத்தை 69 பில்லியன் டாலர் கொடுத்து மைக்ரோசாஃப்ட் வாங்கிய பிறகு, எக்ஸ்பாக்ஸ் பிரிவில் தொடர்ந்து பணிநீக்கங்களும், திட்டங்கள் ரத்து செய்யப்படுவதும் நடைபெற்று வருகிறது. மைக்ரோசாஃப்ட் பணிநீக்கம் குறித்த அறிவிப்பு வெளியான உடனே பங்குச்சந்தையில் அதன் பங்கு மதிப்பு 1%க்கு மேல் சரிவை சந்தித்தது. டெக் நிறுவனங்களில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications

