அமெரிக்கப் பங்குச்சந்தையும், அமெரிக்க முதலீட்டாளர்களையும் தனது ஆதிக்கத்தால் பல வருடங்களாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மத்தியில் தற்போது புதிய போட்டி உருவாகியுள்ளது.
சத்ய நாடெல்லா தலைமையில் மைக்ரோசாப்ட் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் நேற்று இந்நிறுவனம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டதன் வாயிலாக மைக்ரோசாப்ட் பங்குகள் நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 4.21 சதவீதம் உயர்ந்தது.
இதன் எதிரொலியாகச் சந்தை மதிப்பீட்டில் ஆப்பிள் நிறுவனத்தை நெருங்கியுள்ளது மைக்ரோசாப்ட்.
ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் நீண்ட காலமாகவே ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர் வர்த்தகத்தில் மட்டுமே இருக்கும் நிலையில் மைக்ரோசாப்ட் பல துறையில் புதிதாக நுழைந்தது மட்டும் அல்லாமல் அடுத்தடுத்து அமெரிக்க அரசின் ஒப்பந்தங்களைப் பெற்று வருகிறது. இதுமட்டும் அல்லாமல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் சேவையான அசூர் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
சத்ய நாடெல்லா
சத்ய நாடெல்லா தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் சேர்மன் ஆகவும் உயர்ந்துள்ளார். 2014ல் இவர் சிஇஓ-வாகப் பதவியேற்றிய போது மைக்ரோசாப்ட் நிறுவனப் பங்கின் விலை 45 முதல் 49 டாலராக இருந்தது. கடந்த 7 வருடத்தில் இந்நிறுவனத்தின் பங்கு விலை 323.17 டாலராக உயர்ந்துள்ளது.
2021ல் மட்டும் மைக்ரோசாப்ட் பங்குகள் 48.45 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
மைக்ரோசாப்ட் அசூர்
சத்ய நாடெல்லா தலைமையில் மைக்ரோசாப்ட்-ன் அசூர் சேவை பிரிவின் செப்டம்பர் காலாண்டில் முடிவில் முதல் முறையாக 20 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 36 சதவீதம் அதிகமாகும். உலகம் முழுவதும் டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ள காரணத்தால் இந்த உயர்வு ஏற்பட்டு உள்ளது.
மொத்த வருமானம்
மேலும் இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் 45.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இது கடந்த வருடத்தை விடவும் 22 சதவீதம் அதிகமாகவும். இதேபோல் ஒரு மைக்ரோசாப்ட் பங்கிற்கு 2.27 டாலர் வருமானத்தை அளித்துள்ளது.
விண்டோஸ் 11
இதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனம் அடுத்து வெளியிடும் விண்டோஸ் 11 ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு அதிகளவிலான வரவேற்பு இருப்பதாகவும் காலாண்டு முடிவுகளில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கேமிங் பிரிவில் Xbox விற்பனை வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மைக்ரோசாப்ட் பங்குகள்
இப்படி அனைத்து முக்கியமான வர்த்தகமும் வளர்ச்சிப் பாதையில் இருக்கும் காரணத்தால் காலாண்டு முடிவுகள் வெளியான பின்பு மைக்ரோசாப்ட் பங்குகள் 4.21 சதவீத பங்குகள் உயர்ந்து 323.17 டாலராக உயர்ந்தது.
மொத்த சந்தை மதிப்பு
இதன் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 2.43 டிரில்லியன் டாலர் அளவீட்டை எட்டியுள்ளது. இதோடு சந்தை மதிப்பீட்டில் முதல் இடத்தில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் 2.46 டிரில்லியன் டாலர் அளவீட்டில் உள்ளது.
ஆப்பிள் Vs மைக்ரோசாப்ட்
சந்தை மதிப்பீட்டில் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நெருங்கியுள்ள நிலையில் வியாழக்கிழமை வர்த்தகத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தை முந்தி செல்ல அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.