இந்தியாவில் தமிழ்நாடு உட்பட அனைத்து முன்னணி மாநிலங்களும் வெளிநாட்டு நிறுவனங்களைத் தொழில் துவங்கவும், அலுவலகத்தை அமைக்கவும் அழைப்பு விடுத்து வரும் நிலையில், யோகி ஆதித்தியநாத் ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்தில் அமெரிக்காவின் 3 முக்கிய நிறுவனங்கள் தொழில் துவங்க முடிவு செய்துள்ளது.
இதை ஜாக்பாட் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது..
உத்தர பிரதேச யோகி ஆதித்தியநாத்
யோகி ஆதித்தியநாத் முதல்வராக இருக்கும் உத்தர பிரதேச மாநிலத்தில் மைக்ரோசாப்ட், MAQ சாப்ட்வேர் ஆகிய நிறுவனங்களுக்கும் அலுவலகத்தை அமைக்கவும், பெப்சிகோ நிறுவனம் தொழிற்சாலையை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. இதற்காக 2,866 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இம்மாநிலத்தில் இம்மூன்று நிறுவனங்களும் செய்ய உள்ளது.
2,866 கோடி ரூபாய் முதலீடு
மைக்ரோசாப்ட், MAQ சாப்ட்வேர், பெப்சிகோ ஆகிய நிறுவனங்கள் செய்யும் 2,866 கோடி ரூபாய் முதலீடு மூலம் சுமார் 7,500 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என இம்மாநில அரசின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
அலுவலகம் மற்றும் தொழிற்சாலை
இதில் மைக்ரோசாப்ட், MAQ சாப்ட்வேர் ஆகிய நிறுவனங்களும் நொய்டாவில் அலுவலகத்தையும், பெப்சிகோ மதுரா பகுதியில் தொழிற்சாலையை அமைக்கவும் உள்ளதாக இம்மாநில தொழிற்துறை துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க முதலீட்டாளர்கள்
இம்மூன்று நிறுவனங்கள் வருகை மூலம் US-India Strategic Partnership Forum உடன் தொடர்புடைய பல அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு உத்தரப் பிரதேசத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளது. சமீபத்தில் அமெரிக்க முதலீட்டாளர்கள் சிலர் உத்தர பிரதேசத்தில் முதலீடு செய்ய அரசை அணுகியுள்ளதாக MSME துறை அமைச்சர் சித்தார்தா நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிறுவனங்கள் பட்டியல்
மேலும் சித்தார்தா நாத் சிங் கூறுகையில் அடோப், அமேசான், அமெரிக்கன் டவர் கார்ப், ஆப்பிள், கேட்டர்பில்லர், டெல்ஃபி, சிஸ்கோ, டெலாய்ட், எமர்சன், E&Y, கூகிள், ஜான்சன் அண்ட் ஜான்சன், ஜேபி மோர்கன், லாக்ஹீட் மார்டின், மேரியாட் இண்டர்நேஷனல், மாஸ்டர்கார்டு, மான்டெல்ஸ், கார்லைல், வால்மார்ட், வார்பெர்க் பின்கஸ், IHS மார்கிட் மற்றும் USIBC ஆகிய நிறுவனங்கள் உத்திர பிரதேசத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக அறிவித்துள்ளது.
முக்கியத் தொழில்துறை பிரிவு
மேலே கூறப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவ உபகரணம் உற்பத்தி, உணவு பதப்படுத்துதல் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள், ஆட்டோமொபைல், ஐடி மற்றும் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் பணிகளைச் செய்யவும், அதற்கான அலுவலகம் மற்றும் கட்டமைப்புகளை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகச் சித்தார்தா நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அடுத்த அலுவலகம்
இந்தியாவில் பல அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கும் நிலையில் மைக்ரோசாப்ட், MAQ சாப்ட்வேர், பெப்சிகோ புதிதாக உத்தரப் பிரதேசத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நொய்டா
இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு நொய்டாவில் சுமார் 60,000 சதுர மீட்டர் நிலத்தை அம்மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய அலுவலகத்தை இங்கு அமைக்க உள்ளதாகத் தெரிகிறது.
17,000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டம்
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்தியநாத் பதவியேற்றிய 4.5 வருடத்தில் சுமார் 40 வெளிநாட்டு நிறுவனங்கள் சுமார் 17,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டுத் திட்டங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வைத்துள்ளது எனவும் சித்தார்தா நாத் சிங் தெரிவித்துள்ளார்.
MAQ சாப்ட்வேர் நிறுவனம்
இதேபோல் MAQ சாப்ட்வேர் நிறுவனம் 16,350 சதுர மீட்டர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. பெப்சிகோ நிறுவனம் சுமார் 800 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலையை அமைத்து வருகிறது.
தமிழ்நாட்டுக்கு இழப்பு
தமிழ்நாடு அரசு தனது பட்ஜெட் அறிக்கையில் புதிதாக 4 ஐடி பார்க் கட்டும் திட்டத்தை அறிவித்தும், தமிழ்நாட்டில் ஏற்கனவே ஐடி சேவைக்கான தளம் மிகப்பெரிய அளவில் இருக்கும் வேளையில் மைக்ரோசாப்ட், MAQ சாப்ட்வேர் போன்ற முன்னணி நிறுவனங்களை ஈர்க்க தவறியது தமிழ்நாட்டு பெரும் இழப்பு தான். இனி வரும் காலத்தில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கப்படும் என நம்புவோம்.