உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் கார்ப் திங்களன்று இந்தியாவில் தனது நான்காவது டேட்டா சென்டரை நிறுவும் மிக முக்கியமான திட்டத்தை வெளியிட்டது.
சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் இந்தியாவில் தனது வர்த்தகத்தை மிகவும் வேகமாக விரிவாக்கம் செய்து வரும் நிலையில், இந்தியாவை முக்கிய மற்றும் முதன்மையான வர்த்தகத் தளமாக மாற்ற வேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகள் எடுத்து வருகிறது மைக்ரோசாப்ட்.
மைக்ரோசாப்ட் இந்தியாவில் தனது ஆதிக்கத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக 4வது டேட்டா சென்டரை இந்தியாவில் அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது..
மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் இந்தியாவின் தலைவர் அனந்த் மகேஸ்வரி, இந்தியாவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காக நீண்டகால முதலீடுகளைச் செய்து வருவதாகக் கூறினார். இந்தியாவில் தனது நான்காவது டேட்டா சென்டரை நிறுவும் மிக முக்கியமான திட்டத்தை அறிவித்தார்.
அனந்த் மகேஸ்வரி
இந்த டேட்டா சென்டர் $2 பில்லியன் டாலரில் அமைக்கப்படும் எனக் கருத்து நிலவி வந்த நிலையில் அனந்த் மகேஸ்வரி இதற்குப் பதில் அளிக்கவில்லை. ஆனால் டேட்டா சென்டர் குறித்துச் சிறப்பான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
தொடர் முதலீடு
பொதுச் சேவைக்கான கிளவுட் டேட்டா சென்டர் மீது ஒரு முறை மட்டும் முதலீடு செய்வது மூலம் உருவாக்கப்படுவது இல்லை. இதில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். உதாரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில், தற்போதுள்ள மூன்று தரவு மையங்களின் கேபாசிட்டியை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக அனந்த் மகேஸ்வரி கூறினார்.
கிளவுட் சேவை
இந்தியாவின் கிளவுட் சேவை சந்தை 2025ஆம் ஆண்டுக்குள் 10.8 பில்லியன் டாலர் அளவீட்டை எட்டும் என IDC கணித்துள்ளது. ஏற்கனேவ இந்திய அரசு வெளிநாட்டு நிறுவனங்களை இந்திய வாடிக்கையாளர்கள், நிறுவனங்களின் தரவுகளை இந்தியாவில் தான் சேமிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அமேசான் - மைக்ரோசாப்ட்
இதானால் அனைத்து இண்டர்நெட் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு டேட்டா சென்டர் தேவை அதிகரித்துள்ளது. இந்திய கிளவுட் சந்தையில் அமேசான் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அமேசான் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மைக்ரோசாப்ட் தனது சேவையை விரிவாக்கம் செய்ய 4வது டேட்டா சென்டரை உருவாக்கிறது.