தொடர்ந்து முதலீடுகளை வாரிக் குவித்து வரும் தெலுங்கானா, தற்போது மைக்ரோசாப்ட்டுடன் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுக்கு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.
இது குறித்து வெளியான செய்தியில் அமெரிக்காவின் மிகப்பெரிய ஐடி ஜாம்பவான் ஆன மைக்ரோசாப்ட், மிகப்பெரிய அளவில் தெலுங்கானாவில் டேட்டா மையத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தெலுங்கானாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், இது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஹைத்ராபாத் அருகே
மைக்ரோசாப்ட் நிறுவனம் இதற்காக ஹைத்ராபாத் அருகே, ஒரு நிலத்தினை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த டேட்டா மையம் BAM Digital Realty என்ற பெயரில் உருவாக உள்ளதாகவும், இதனை ப்ரூக்பீல்டு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்க உள்ளதாகவும் தெரிகிறது. இது ஒரு கூட்டு முயற்சி என்றும் கூறப்படுகிறது.
இது கூட்டு முயற்சி
ப்ரூக் பீல்ட் இன்ப்ராட்ரக்சர் என்பது கனடாவின் ப்ரூக்ஃபீல்டின் துணை நிறுவனமாகும். ஏற்கனவே தெலுங்கானா ஐடி துறை சம்பந்தமான முதலீடுகளை தொடர்ந்து ஈர்த்து வருகின்றது. இதனால் தெலுங்கானாவில் மேற்கொண்டு வேலை வாய்ப்புகள் பெருகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் அறிவிப்பு வரலாம்
மைக்ரோசாப்ட் மற்றும் தெலுங்கானாவின் இந்த பேச்சு வார்த்தை குறித்தான அறிவிப்பு விரைவில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
கடந்த 2019ல் மைக்ரோசாப்ட் நிறுவனமும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் இந்தியாவில் கிளவுட் டேட்டா செண்டர்களை நிறுவனதற்காக ஒரு நீண்டகால கூட்டணிக்கு ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல நிறுவனங்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சிறு வணிகங்களை குறி வைத்து, ஜியோவின் நெட்வொர்க்கில் அதன் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையான அஜூர் கிளவுட் கொண்டு வரப்பட்டது.
மைக்ரோசாப்ட் மட்டும் அல்ல, ஏற்கனவே கூகுள் மற்றும் அமேசான் வெப் சர்வீசஸ் போன்ற பல நிறுவனங்களும் தங்களது டேட்டா மையங்களை தெலுங்கானாவில் உருவாக்கியுள்ளன.