தமிழ்நாட்டின் முக்கிய வர்த்தகப் பகுதியான ஈரோடு மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்தியாவில் பல மாநிலங்களில் வர்த்தகம் செய்து வரும் மில்கி மிஸ்ட் தனது உற்பத்தி அளவை அதிகரிக்கவும், புதிய பிரிவில் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு உள்ளது.
இந்த மாபெரும் திட்டத்திற்காக அடுத்த 3 வருடத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது.
மில்கி மிஸ்ட் நிறுவனம்
மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் பன்னீர், வெண்ணெய், தயிர், சீஸ், நெய் சமீபத்தில் வெளியான க்ரீம், சப்பாத்தி, பரோட்டோ, இட்லி தோசை மாவு போன்றவை மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
வர்த்தக விரிவாக்கம்
இந்நிலையில் தங்களது வர்த்தகத்தை தமிழ்நாட்டைத் தாண்டி பல மாநிலங்களுக்கும், பல பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய மில்கி மிஸ்ட் திட்டமிட்டு உள்ளது, ஏற்கனவே சந்தையில் போட்டி அதிகமாக இருக்கும் காரணத்தால் குறைந்த காலகட்டத்தில் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெறவும், உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய தயாரிப்புகளையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளது.
1000 கோடி ரூபாய் முதலீடு
இந்த முக்கியமான திட்டத்திற்காகச் சுமார் 1000 கோடி ரூபாய் தொகையை அடுத்த 3 வருடத்தில் முதலீடு செய்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது மில்கி மிஸ்ட் நிர்வாகம். தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 1000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தில் 550 கோடி ரூபாயை தற்போது இருக்கும் உற்பத்தி தளத்தை விரிவாக்கம் செய்வதற்காகப் பயன்படுத்த உள்ளது.
தமிழ்நாடு அரசு
நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசுடன் மில்கி மிஸ்ட் நிறுவனம் சுமார் 600 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்து, இதற்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது கூடுதலாக 400 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளதாக இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவரான சதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
ஐபிஓ-வுக்குத் திட்டம்
1000 கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை என்பதால், மார்ச் மாதம் தனியார் பங்கு முதலீட்டு வாயிலாகவும், அடுத்த 20 மாதத்தில் ஐபிஓ வாயிலாகவும் முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாகச் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
புதிய தொழிற்சாலை
மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் உற்பத்தியை அதிகரிப்பதற்காகப் பெருந்துறை-யில் ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைக்கு அருகில் புதிதாக ஒரு தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலை மூலம் தினமும் 15 லட்சம் லிட்டர் பால் வாங்கும் நிலைக்கு வர்த்தக விரிவாக்கம் செய்யப்படும்.
சாக்லெட், ஐஸ்கிரீம்
மேலும் மிஸ்கி மிஸ்ட் Capella என்ற பெயரில் புதிதாக டார்க் சாக்லெட்-ஐ அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. இதோடு இந்தியாவில் எப்போதும் மவுசு குறையாத குறிப்பாகத் தென் இந்தியாவில் வருடத்தில் 365 நாட்களும் வர்த்தகம் நிலையாக இருக்கும் ஐஸ்கிரீம் பிரிவிலும் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
8 மாவட்டங்கள்
மில்கி மஸ்ட் நிறுவனம் ஈரோடு, சேலம், திருப்பூர், ஜோலார்பேட்டை என 8 மாவட்டங்களில் 70,000 விவசாயிகளிடம் இருந்து சுமார் 7 லட்சம் லிட்டர் பால் வாங்கிச் சுமார் 25 பொருட்களைத் தயாரிக்கிறது. மில்கி மிஸ்ட் நிறுவனம் 1992ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது.