கடன் வாங்குவது இன்றைய வாழ்க்கை முறையில் பெரிய விஷயமாக யாரும் பார்ப்பதில்லை, சொல்லப்போனால் கடன் வாங்காதவர்களிடம் கூடப் போன் போட்டு கடன் கொடுக்கிறது வங்கிகள். ஆனால் அந்தக் கடன் எதற்காக வாங்குகிறோம் என்பதில் தான் பெரிய வித்தியாசமே உள்ளது. குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர் கடன் வாங்குவதற்கான காரணங்கள் பல ஆச்சரியமான விஷயங்களைக் கூறுகிறது.
இன்றைய இளைய தலைமுறையினர் எதற்காக அதிகளவில் கடன் வாங்குகின்றனர் என்பதைப் பற்றி ஒரு தனியார் கடன் சேவை அளிக்கும் நிறுவனமான CASHe ஒரு முக்கியமான ஆய்வை செய்துள்ளது.
இளைய தலைமுறையினர்
CASHe நிறுவனம் செய்துள்ள ஆய்வின் படி 2019ஆம் ஆண்டில் இளைய தலைமுறையினர் அதிகளவில் மருத்துவச் செலவு மற்றும் நுகர்வோர் பொருட்களை (consumer durables) பெறுவதற்காகக் கடன் பெறுகிறார்கள் எனக் கூறுகிறது.
நுகர்வோர் பொருட்கள் வாங்குவதற்காகக் கடன் பெறுகிறார்கள் என்பது புரிகிறது. மருத்துவச் செலவிற்காகக் கடன் வாங்குகின்றனர் என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
மருத்துவச் செலவு
CASHe நிறுவனத்தின் ஆய்வின் படி சுமார் 37 சதவீத வாடிக்கையாளர்கள் அவசர மருத்துவச் செலவிற்காகவும் அல்லது எதிர்பாராத மருத்துவச் செலவிற்காக அதிகளவில் கடன் பெற்றுள்ளனர். இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் சுமார் 31 சதவீதம் அதிகம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளவர்களில் சுமார் 57 சதவீதம் பேர் அவசர தேவைக்காகத் தான் கடன் பெற்றுள்ளனர்.
ஆய்வு
'The 2019 Millennial Loan-o-Nomics' என்ற ஆய்வை CASHe நிறுவனம் சுமார் 4 லட்ச கடன் விண்ணப்பங்களை வைத்து ஆய்வு செய்து பல தரப்பட்ட காரணிகளை வைத்து வாடிக்கையாளர்களிடம் கருத்தை மையப்படுத்தி, மக்கள் எதற்காக, எவ்வளவு தொகை, எந்த நேரத்தில் கடன் வாங்குகிறார்கள் என்பதை ஆய்வு செய்து தகவல்களைத் தொகுத்துள்ளது.
மறு வாடிக்கையாளர்கள்
இந்நிறுவனத்தின் 4 லட்ச கடன் விண்ணப்பதாரர்கள் சராசரியாகக் கடன் வாங்கிய 71 நாட்களில் மீண்டும் கடன் வாங்குவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் 27 சதவீத வாடிக்கையாளர்கள் 10000 ரூபாய்க்குக் குறைவான கடனை மட்டுமே வாங்குகின்றனர்.
அனைத்திற்கும் மேலாக இன்றைய இளைய தலைமுறையினர் வாங்கிய கடன் சரியான நேரத்திற்குத் திருப்பிச் செலுத்துகின்றனர் எனவும் CASHe நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.
ஆண்கள் பெண்கள்
இந்நிறுவனத்தின் 4 லட்ச கடன் விண்ணப்பதாரர்களில் வெறும் 10 சதவீதம் பேர் தான் பெண்கள் மீதமுள்ள 90 சதவீத பேரும் ஆண்கள்.
இதோடு ஹைதராபாத் சேர்ந்தவர்கள் இந்நிறுவனத்தில் இருந்து அதிகளவில் கடன் பெறுகின்றனர். ஹைதரபாத் தொடர்ந்து பெங்களூரு, டெல்லி, புனே, மும்பை, சென்னை, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.