பொதுவாக பெரும் பணக்காரர்கள் என்றாலே அவர்களின் ஆடை, கார் உள்ளிட்டவற்றில் தான் ஆடம்பரத்தையும் செல்வ வளத்தையும் வெளிப்படுத்துவார்கள். விலை உயர்ந்த கார்கள், கைக்கடிகாரங்கள், புது புது ஆடைகள் என நாம் காண முடியும்.
அண்மையில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டதற்கு முக்கிய காரணம் அதில் இருந்த ஆடம்பரம் தான்.
ஆனால் தற்போது உலக அளவில் பெரும் பணக்காரர்கள் அனைவரும் சிம்பிளான லைப் ஸ்டைலுக்கு மாறி வருகிறார்கள். இதனை ”under consumption" என்றும் "frugal and cheap" living என்றும் அழைக்கிறார்கள்.

அதாவது புதிதாக பொருட்களை வாங்கும் பணம் இருந்தாலும் ஆடம்பரத்துக்காக அதனை செலவிடாமல் மினிமலிஸ்டாக இருப்பது. நாலு துணி மணி, ஒரு கார், வீடு என ஆடம்பர செலவுகளை குறைப்பது.
தற்போது உலக அளவில் இதுதான் ட்ரெண்டான விஷயமாக மாறி இருக்கிறது. புதிதாக துணிமணி வாங்காமல் ஏற்கனவே உடுத்திய ஆடையையே அடிக்கடி உடுத்துவது. ஏற்கனவே பயன்படுத்திய காரையே தொடர்ந்து பயன்படுத்துவது என பல பணக்காரர்களும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி அதை ஒரு டிரெண்டாக மாற்றி வருகின்றனர். அண்மையில் ஷாங் சாவேத்ரா என்ற ஒரு தொழில் முனைவோர் தனக்கு பல்லாயிரம் கோடி கணக்கிலான சொத்துக்கள் இருந்தாலும் ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்வதாக பதிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வாடகை வீட்டில் தான் வசிப்பதாக கூறும் அவர் தன்னிடம் 16 ஆண்டுகள் பழமையான கார் தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். தன்னுடைய குழந்தைகளுக்கு தேவையான பொம்மைகள் மற்றும் தனக்கு தேவையான துணிமணிகளை கூட தான் செகண்ட் ஹேண்டில் ஃபேஸ்புக் மார்க்கெட் பிளேஸ் வழியாகவே வாங்குகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தாமல் தங்களுடைய கவனம் முழுவதையும் குழந்தைகளின் கல்வி, ரியல் எஸ்டேட் முதலீடு மற்றும் மக்கள் நலன் சார்ந்த நன்கொடைகளில் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல ஆனி கோல் என்ற ஒரு ஆய்வாளர் பல மில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவராக இருந்தாலும் அவர் ஒரு மாதத்திற்கு 4000 டாலர்களை மட்டுமே செலவு செய்வதாக தெரிவித்துள்ளார்.
தான் சொந்தமாக வைத்திருந்த காரை கூட கடந்த ஆண்டு விற்பனை செய்து விட்டதாக கூறும் அவர் ஹோட்டலில் சென்று உணவு உண்பதை தவிர்த்து வீட்டிலேயே உணவு தயாரித்து உண்பது என தன்னுடைய பழக்க வழக்கங்களை மாற்றிவிட்டதாக கூறியிருக்கிறார்.
சலூனுக்கு செல்லாமல் தானே முடி வெட்டி கொள்வது , மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் புதிதாக துணிமணிகள் வாங்குவது என வாழ்க்கை முறையை மாற்றி இருக்கிறாராம். ஆடம்பர செலவுகளை தவிர்த்து மலை ஏறுவது, புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வது என கவனத்தை திசை திருப்பி இருக்கிறாராம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications