தமிழ்நாட்டில், மத்திய அரசின் பாதுகாப்புத் துறை உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் (Defence Testing Infrastructure Scheme - DTIS) கீழ், சென்னை மற்றும் திருச்சியில் 4 அதிநவீன பாதுகாப்புத் துறை சோதனை மையங்கள் அதாவது Defence Testing Centre அமைக்கப்படவுள்ளன. இந்த சோதனை மையங்கள் அனைத்தும், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் ஜூலை 2 ஆம் தேதி, பாதுகாப்புத் துறை செயலாளர் கிரிதர் அர்மனே முன்னிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) இடையே கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தம் மூலம் அமைக்கப்படும் 4 பாதுகாப்புத் துறை சோதனை மையங்களில் 3 சென்னையிலும், ஒன்று திருச்சியிலும் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் ஆளில்லா விமானங்கள், மின்னணு ஆயுதங்கள் மற்றும் எலெக்ட்ரோ ஆப்டிக்ஸ் சோதனை நிலையங்களும், திருச்சியில் இயந்திரவியல் மற்றும் பொருட்கள் சோதனை மையம் அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே பாதுகாப்புத் துறை உற்பத்தி தளங்கள் இருக்கும் காரணத்தால் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் இந்த சோதனை மையங்கள் இத்துறைக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த 4 பாதுகாப்புத் துறை சோதனையை அமைக்கப்படுவது யார் என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னையில் அமைக்கப்படும் சோதனை மையங்களின் லிஸ்ட்:
ஆளில்லா விமானங்கள் (Unmanned Aerial System - UAS) சோதனை மையம்: சென்னையில் உள்ள வள்ளம் வடகல் பகுதியில், சுமார் 45 கோடி ரூபாய் செலவில் இந்த சோதனை மையம் அமைக்கப்படவுள்ளது. கேரள அரசு நிறுவனமான கெல்ட்ரான் (Keltron), ஸ்டேண்டர்டு டெஸ்டிங் அண்ட் கம்ப்ளைன்ஸ் (Standard Testing & Compliance), சென்ஸ் இமேஜ் (Sense Image Pvt. Ltd.), மற்றும் ஆவிஷ்கா (Avishka) ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த சோதனை மையத்தை உருவாக்கவுள்ளன.
மின்னணு ஆயுதங்கள் (Electronic Warfare - EW) சோதனை மையம்: சென்னை ஏரோஹப் வளாகத்தில், சுமார் 46.9 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த சோதனை மையம் அமைக்கப்படவுள்ளது. பாரத் எலக்ட்ரானிக்ஸ், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல், இந்தியா ஒப்டெல் மற்றும் பாரத் டைனமிக்ஸ் ஆகிய பாதுகாப்புத் துறையை சேர்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து இந்த சோதனை மையத்தை உருவாக்கவுள்ளன.
எலக்ட்ரோ ஆப்டிக்ஸ் (Electro Optics - EO) சோதனை மையம்: மின்னணு ஆயுதங்கள் சோதனை மையம் அமையும் இதே சென்னை ஏரோஹப் வளாகத்தில், சுமார் 41.22 கோடி ரூபாய் முதலீட்டில் எலக்ட்ரோ ஆப்டிக்ஸ் சோதனை மையம் அமைக்கப்படவுள்ளது. இந்தியா ஒப்டெல், Armoured Vehicles Nigam, பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கோவா ஷிபயார்டு ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த எலக்ட்ரோ ஆப்டிக்ஸ் சோதனை மையத்தை அமைக்க உள்ளது.
திருச்சி-யில் அமைக்கப்படும் சோதனை மையம்:
மெக்கானிக்கல் மற்றும் மெட்டிரியல் சோதனை மையம் (Mechanical and Materials Testing Facility): திருச்சி-யில் பிரபலமான TREAT வளாகத்தில், சுமார் 49.7 கோடி ரூபாய் செலவில் இத்துறைக்கான சோதனை மையம் அமைக்கப்படவுள்ளது. இதை மைக்ரோலேப் (Microlab), பாரத் எர்த் மூவர்ஸ், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் , மற்றும் வைதீஸ்வரன் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த சோதனை மையத்தை அமைக்க உள்ளது.


Click it and Unblock the Notifications