நாட்டில் உள்நாட்டு மின்னணு உற்பத்தியை, குறிப்பாக மொபைல் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக மூன்று திட்டங்களை மத்திய தகவல் தொடர்பு துறை தொடங்கியுள்ளது.
இது குறித்து வெளியான செய்தியில், மொபைல் போன்கள் உற்பத்தியில் இந்தியா, உலகளவில் 2வது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல், தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஆக மேற்கண்ட இத்துறையினை மேம்படுத்த, இன்னும் மூன்று அதிரடியான திட்டங்களையும் தொடங்கி வைத்துள்ளார்.
நிதி ஒதுக்கீடு
கடந்த ஏப்ரல் 2ம் தேதியே இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதற்கான வரையறைகளை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் செவ்வாய்கிழமையன்று இந்த திட்டங்களுக்கான வரையறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த மூன்று திட்டங்களுக்காகவும் 50,000 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தான் இலக்கு
அது மட்டும் உலகளாவிய மின்னணு விநியோக சங்கிலியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் எலக்ட்ரானிக் உற்பத்தி 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலும், இது ஏற்றுமதி 5.8 லட்சம் கோடி ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 லட்சம் வேலைகளை உருவாக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதென்ன மூன்று திட்டங்கள்
உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்பு திட்டம் (PLI), பெரிய அளவிலான மின் உற்பத்தி மின்னணு உபகரணங்கள் செமி கண்டக்டர்கள் தயாரிப்பதை ஊக்குவிப்பது (promotion of components and semiconductors manufacturing), திருத்தியமைக்கப்பட்ட மின்னணு உற்பத்தி (setting up of clusters) மேற்கண்ட இந்த திட்டங்களுக்கான வரையறைகளைத் தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி அதிகரிப்பு
அமைச்சகத்தின் அறிக்கையின் படி, உள்நாட்டு மொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி, 2018/19ம் ஆண்டி,ல் 70 பில்லியன் டாலராக இருந்தது. இது நாட்டின் அனைத்து மின்னணு உற்பத்தியிலும் மிகப்பெரிய பிரிவாகும். இதே 2014/15, ஆண்டில் இருந்து மொபைல் உற்பத்தி 2.9 பில்லியன் டாலர்களில் இருந்து, 2018/19ல் 24.3 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
இந்த திட்டம் எதெல்லாம் கவர் செய்யும்?
மத்திய அமைச்சகத்தின் இந்த மின்னணு உற்பத்தி திட்டமானது அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியது. குறிப்பாக மூலோபாயம், வாகனம், மருத்துவம், தொழில் நுட்பம், தொலைத் தொடர்பு துறை உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கியது. எனினும் மொபைல் துறையானது மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
தனது நிலையை தக்கவைத்துக் கொள்ள சீனா முற்படும்
அமெரிக்கா சீனா பிரச்சனைகளுக்கு இடையே, தற்போது சீனா இந்தியாவினையும் சீண்ட ஆரம்பித்துள்ள இந்த நிலையில் தான், இந்தியா உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க அடையாளம் கண்டுள்ள துறைகளில் ஒன்று தான் எலக்ட்ரானிக்ஸ் துறை. என்ன தான் நிதிகளை ஒதுக்கீடு செய்து அரசு பலப்படுத்தினாலும், சீனா தனது நிலைப்பாட்டினை தக்கவைத்துக் கொள்ள முற்படலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.