தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களைத் தொழிற்துறை மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையில் மேம்படுத்தும் பணிகளை முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இன்று மதுரையில் தென் மாவட்டங்களுக்கான MSME மாநாடு நடந்தது இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், MSME துறை அமைச்சர் தா மோ அன்பரசன், வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தமிழ்நாட்டில் மூன்று தொழிற்துறை மைக்ரோ கிளஸ்டர்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
3 மைக்ரோ தொழிற்துறை கிளஸ்டர்
முதல்வர் முக ஸ்டாலின் தமிழ்நாட்டில் மூன்று மைக்ரோ தொழிற்துறை கிளஸ்டர்களை அமைப்பதற்கான உத்தரவுகளை வெளியிட்டார்.
1. பொம்பை கிளஸ்டர், விளாச்சேரி, மதுரை
2. நீர் தாமரை கிளஸ்டர், தூத்துக்குடி
3. பெண்கள் நெசவு கிளஸ்ட்ர், ராஜபாளையம், விருதுநகர்
வர்த்தகம், வேலைவாய்ப்பு
இதன் மூலம் இப்பகுதிகளில் தத்தம் துறையைச் சார்ந்த பல புதிய நிறுவனங்கள் உருவாகும், இதேபோல் இந்த நிறுவனங்களுக்கு உதவி செய்யும் வகையில் சப்ளை, மூலப்பொருள், விநியோகம், லாஜிஸ்டிக்ஸ் போன்ற துறைகளுக்குப் புதிய வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
முக்கிய விருதுகள்
தூத்துக்குடி கல்பகா கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் - சிறந்த தொழில்முனைவோருக்கான விருது
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஐசிஏ ஸ்பெஷாலிட்டிஸ் நிறுவனத்திற்கு - சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான விருது
தூத்துக்குடி ரமேஷ் பிளவர்ஸ் பிரைவேட் லிமிடெட் - சிறந்த தரம் மற்றும் ஏற்றுமதிக்கான விருது
திருப்பத்தூர் Freshara Picklz Exports - சிறந்த வேளாண் தொழில் விருது
புதுக்கோட்டைப் பிரபு தொழிற்சாலை எரிவாயு நிறுவனம் - சிறப்புப் பிரிவில் சிறந்த தொழில்முனைவோருக்கான மாநில அளவிலான விருது வழங்கப்பட்டது.
அதிகக் கடன் கொடுத்த வங்கி
தமிழ்நாட்டில் MSME நிறுவனங்களுக்கு அதிகக் கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தை இந்தியன் வங்கி பெற்றுள்ளது, இதைத் தொடர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா வங்கி பெற்றுள்ளது.
கடன் உதவி
தமிழ்நாட்டில் சுமார் 6678 MSME நிறுவனங்களுக்குச் சுமார் 419.54 லட்சம் ரூபாய் மானியங்கள் சுமார் 10 விதமான மானியங்களில் வழங்கப்பட்டுள்ளன என்று MSME துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு
மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 1.56 லட்சம் மாணவர்கள் மற்றும் 3120 ஆசிரியர்களுக்குத் தொழில்முனைவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட உள்ளது.
சிட்கோ
கரூர், புஞ்சைகளக்குறிச்சி மற்றும் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஆகிய பகுதிகளில் சிட்கோ பொது வசதிக் கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.