இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் போதுமான முதலீட்டைப் பெற முடியாத நிலையில் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற முக்கியமான நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் அடுத்தடுத்து ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வந்த நிலையில் தற்போது புதிதாக இரண்டு நிறுவனங்கள் 200க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
இந்த அறிவிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
ஸ்டார்ட்அப்
உலக நாடுகளில் அடுத்தடுத்து அதிகரித்து வரும் வட்டி விகித உயர்வு மற்றும் டெக் பங்குகளின் தொடர் வீழ்ச்சி வெளிநாட்டு முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பல முன்னணி முதலீடுகள் அடுத்த 8 முதல் 12 மாதத்திற்குப் புதிய முதலீடு செய்ய முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஊழியர்கள் பணிநீக்கம்
இந்நிலையில் முதலீடு இல்லாமல் இயங்க முடியாத நிலையில் இருக்கும் பல முன்னணி இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், வர்த்தகத்தையும், முதலீட்டையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அதிரடியாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது. முதலில் விற்பனை, சப்போர்ட் போன்ற பிரிவுகளில் மட்டுமே இருந்த பணிநீக்கம் தற்போது டெக் ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது.
ப்ரென்ட்ரோ 145 ஊழியர்கள் பணிநீக்கம்
இந்நிலையில் லேர்னிங் மற்றும் கம்யூனிட்டி பிளாட்பார்ம் ஆன ப்ரென்ட்ரோ (Frontrow) சுமார் 145 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இது இந்நிறுவன மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 30 சதவீதமாகும். இந்தப் பணிநீக்கம் மூலம் அடுத்த 24 மாதத்திற்கான வர்த்தகத்திற்கு நிதியை சேமித்துள்ளதாக இந்நிறுவனத்தில் இருந்து வெளியாகும் தரவுகள் கூறுகிறது.
கல்வி சேவை துறை
Edtech பிரிவில் ஏற்கனவே Unacademy மற்றும் Vedantu ஆகிய இரு நிறுவனங்கள் 1549 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்து பள்ளி, கல்லூரிகள் முழுமையாகத் திறக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் கல்வி சேவைகளின் தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் Edtech பிரிவு நிறுவனங்கள் அதிகப்படியான வர்த்தகச் சரிவை எதிர்கொண்டு உள்ளது.
MPL 100 ஊழியர்கள் பணிநீக்கம்
இதேபோல் இந்தியாவில் மிகவும் பிரபலமான மொபைல் ப்ரீமியம் லீக் (MPL) நிறுவனம் சுமார் 100 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. புதிய முதலீடுகளைப் பெற முடியாத காரணத்தால் 10 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது மட்டும் அல்லாமல் MPL நிறுவனம் இந்தோனேசியா சந்தையை விட்டு வெளியேறவும் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications