பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து அதிகரிப்பதை விடவும் மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது. இதனால் இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோக துறையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் அதிகளவிலான லாபத்தை அடைய உள்ளது.
இதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் முக்கியமான ஒரு நிறுவனம்.
எரிவாயு விலை உயர்வு
மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களான ONGC, ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள எரிவாயு தளத்தில் இருக்கும் உற்பத்தி செய்யப்படும் ஒரு mmBtu அளவிலான இயற்கை எரிவாயுவுக்கு 1.79 டாலராக இருந்த நிலையில் 62 சதவீதம் அதிகரித்து 2.90 டாலராக உயர்த்தியுள்ளது. இப்புதிய விலை நிலவரம் அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022 வரையில் நடைமுறையில் இருக்கும்.
62 சதவீதம் உயர்வு
மத்திய அரசு தடாலடியாக 62 சதவீதம் உயர்த்தியுள்ளதன் மூலம் இயற்கை எரிவாயு வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகளவிலான தொகையைக் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் இப்பிரிவு வர்த்தகத்தில் இருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் அதிகளவிலான வருமானம் கிடைக்கும்.
முக்கியத் துறைகள்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு-வை சில முக்கியத் துறைகள் அதிகளவில் பயன்படுத்துகிறது. உதாரணமாக மொத்த இயற்கை எரிவாயுவின் உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்தை மின்சார உற்பத்தி நிறுவனங்களும், 27 சதவீதம் விவசாய உரம் தயாரிப்பு நிறுவனங்களும், 19 சதவீதத்தை நகர எரிவாயு விநியோகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
விவசாய உரம்
இந்த விலை உயர்வின் மூலம் விவசாய உரம் தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி செலவுகள் அதிகரிக்கும், இதனால் உரங்களின் விலை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் விவசாய பொருட்களின் உற்பத்தி செலவுகளையும் அதிகரிக்கும். இதனால் மக்கள் அதிகத் தொகையைக் கொடுத்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டிய நிலை வரும். இதேபோலத் தான் மின்சார உற்பத்தியும்.
டீப் வாட்டர் உற்பத்தி
இதேபோல் மத்திய அரசு டீப் வாட்டர் மற்றும் இதர கடுமையான பகுதிகளில் இருந்து உற்பத்தி செய்யும் இயற்கை எரிவாயு விலையை 3.62 டாலரில் இருந்து 6.13 டாலர் வரையில் உயர்த்தியுள்ளது. இந்த எரிவாயும் அனைத்து துறையிலும் பயன்படுத்த முடியும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் KG பேசின்
இப்புதிய விலை உயர்வின் மூலம் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் KG பேசின் பகுதியில் இருந்து உற்பத்தி செய்யும் இயற்கை எரிவாயுவுக்கு அதிக விலை கிடைக்க உள்ளது. இதன் மூலம் அதிகளவிலான லாபத்தை ரிலையன்ஸ் பெற உள்ளது.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மொத்த வருமானத்தில் பங்கீட்டில் இயற்கை எரிவாயு மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவாக இருந்தாலும், இப்புதிய விலை உயர்வின் மூலம் அதிகளவிலான வருமானத்தை ரிலையன்ஸ் பெற உள்ளது.
இந்திய உற்பத்தி
மத்திய அரசின் அறிவித்துள்ள எரிவாயு விலை உயர்வின் மூலம் இத்துறையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் அதிகளவிலான லாபம் கிடைக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. இதேபோல் இந்த விலை நிர்ணயம் அனைத்தும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கு மட்டுமே.