மோடி அரசு பல ஆண்டுப் போராட்டத்திற்குப் பின்பு ஏர் இந்தியாவை டாடா நிறுவனத்திற்கு விற்பனை செய்தாலும், மிகப்பெரிய அளவிலான தொகையை ஏர் இந்தியா நிறுவனத்தின் பெயரில் மத்திய அரசு கடனாக வைத்துள்ளது.
இந்தக் கடனை தீர்க்கும் வகையில் மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில் சுமார் 51,971 கோடி ரூபாய் தொகையை ஏர் இந்தியா நிலுவையில் உள்ள கடனை தீர்க்க ஒதுக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடன் - ஜிடிபி விகிதம் கடந்த 3 வருடத்தில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில் கடனை குறைப்பது முக்கியமான விஷயமாக விளங்குகிறது.
ரூ.37.70 லட்சம் கோடி
மத்திய நிதியமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் 2021-22 ஆம் நிதியாண்டில் இந்திய அரசின் மொத்த செலவுகளின் அளவு 34.83 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் இது 37.70 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என இன்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
ஏர் இந்தியா
மேலும் 2021-22ஆம் ஆண்டில் மத்திய அரசின் மொத்த மூலதன செலவுகளின் அளவு 6.03 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனவும், இதில் ஏர் இந்தியாவின் கடனை தீர்க்க செலுத்தப்படும் 51,971 கோடி ரூபாயும் அடக்கம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.
டாடா குழுமம்
டாடா குழுமத்தின் டேலெஸ் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்கி மொத்த நிறுவனத்தையும் சுமார் 18,000 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியது. இதில் 15,300 கோடி ரூபாய் ஏர் இந்தியா கடனை செலுத்துவதற்காகவும், மீதமுள்ள 2,700 கோடி பணமாகவும் மத்திய அரசு பெற்றது.
AI Asset Holding நிறுவனம்
ஏர் இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசு விமானங்கள், பார்கிங் ஸ்லாட், ஊழியர்கள், கட்டமைப்புகளை மட்டுமே டாடாவுக்கு அளித்தது. ஏர் இந்தியாவின் பல ரியல் எஸ்டேட் சொத்துக்கள், மற்றும் சில வர்த்தகப் பிரிவுகளை AI Asset Holding Ltd என்ற SPV நிறுவனத்திற்குக் கைமாற்றப்பட்டது.
62,057 கோடி ரூபாய்
தற்போது பட்ஜெட் அறிவிப்பின் படி AI Asset Holding 2021-22ஆம் நிதியாண்டில் 62,057 கோடி ரூபாய் பெறும், இதில் 36,254 கோடி ரூபாயை முந்தைய அரசு பங்குகளை வைத்து கடன் பெற்றதற்குப் பயன்படுத்தவும், 12,357 கோடி ரூபாயை ஏர் இந்தியா விற்பனைக்கு வாங்கிய கடனுக்கும், 13,446 கோடி ரூபாய் நிலுவைத் தொகைக்குச் செலுத்தப்பட உள்ளது.