பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு வளர்ச்சி திட்டத்திற்கு நிதி திரட்டும் பொருட்டும் அரசு சொத்துக்கள் நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு விட்டும், பங்கு இருப்புகளை விற்பனை செய்தும் முதலீட்டைத் திரட்டி வருகிறது.
இதன் மூலம் பல நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் நிலையில் தற்போது இப்பட்டியலில் புதிதாக ஒரு நிறுவனம் சேர்ந்துள்ளது.
ஹிந்துஸ்தான் ஜிங்க்
மத்திய அரசு ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் இருக்கும் பங்குகளை மொத்தமாக விற்பனை செய்ய இன்று அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனப் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 7 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
29.54 சதவீத பங்குகள்
ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் மத்திய அரசு சுமார் 29.54 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதில் சிறிய அளவிலான பங்குகள் மட்டுமே மத்திய அரசு விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மொத்த பங்குகளையும் விற்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
39,385 கோடி ரூபாய்
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 29.54 சதவீத ஹிந்துஸ்தான் ஜிங்க் பங்குகளின் இன்றைய மதிப்பு சுமார் 39,385 கோடி ரூபாய். புதன்கிழமை காலை வர்த்தகத்தில் 290.20 ரூபாய் விலைக்குத் துவங்கிய ஹிந்துஸ்தான் ஜிங்க் பங்குகள் அதிகப்படியான 318.00 ரூபாய் வரையில் உயர்ந்து உள்ளது.
வேதாந்தா குரூப்
ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் ஒரு காலத்தில் அதிகப்படியான பங்குகளை மத்திய அரசு தான் வைத்துத்திருந்து. இதற்கு முன்பு ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை 2002ஆம் ஆண்டு விற்பனை செய்த போது அனில் அகர்வாலின் வேதாந்தா குரூப் கைப்பற்றியது.
அனில் அகர்வால்
இதைத் தொடர்ந்து படிப்படியாக 64.92 சதவீத பங்குகளைக் கைப்பற்றி மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. தற்போது மத்திய அரசு விற்பனை செய்யும் 29.54 சதவீத பங்குகளை அனில் அகர்வால் தான் வாங்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
ஹிந்துஸ்தான் ஜிங்க் , ஐடிசி
மத்திய அரசு ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் 29.54 சதவீத பங்குகள் உடன் ஐடிசி நிறுவனத்தில் வைத்திருக்கும் 7.91 சதவீத பங்குகளையும் விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டுக்குள் இவ்விரு நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.