இந்தியாவில் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக இருந்த வோடபோன், ஜியோ உடனான போட்டியை சமாளிக்க ஐடியா உடன் சேர்ந்தது. இது மிகவும் சிறப்பான முடிவு என்பது மட்டும் அல்லாமல் ஒரு கட்டத்தில் இந்தியாவிலேயே அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாகவும் இருந்தது.
ஆனால் இக்கூட்டணியில் இரு நிறுவனத்திடமும் அதிகப்படியான கட்டண நிலுவையும், நிதிப்பற்றாக்குறையும் இருந்தது.
இதை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து மாடிக்கொண்ட நிலையில் தற்போது தனது கட்டண நிலுவைக்காக அரசுக்கு வோடபோன் ஐடியா பங்குகளைக் கொடுக்கும் அளவிற்கு வந்துள்ளது. 16000 கோடி ரூபாய் மதிப்பிலான AGR நிலுவை தொகைக்கான வட்டி-க்கு வோடபோன் பங்குகளைப் பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வோடபோன் ஐடியா
வோடபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஒத்திவைக்கப்பட்ட ஏஜிஆர் நிலுவை தொகைக்கான வட்டி தொகையில் 16,000 கோடி ரூபாய்க்கு வோடபோன் ஐடியாவின் ஒரு பங்கிற்கு 10 ரூபாய் மதிப்பீட்டில் பங்குகளாக மாற்றி அரசு ஏற்றுக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது.
ப்ரோமோட்டர்கள்
வோடபோன் ஐடியாவின் ப்ரோமோட்டர்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளில் உறுதியாக இருப்பதாகவும் தேவையான முதலீட்டை விரைவில் கொண்டு வரவும் அரசுக்கு உத்தரவாதம் கொடுத்த நிலையில் 16000 கோடி ரூபாய்க்கு இந்நிறுவன பங்குகளைப் பெற ஒப்புக்கொண்டு உள்ளது.
நிலுவை தொகை
இந்த நிலுவை தொகை பங்குகளாக மாற்றும் வாய்ப்பை அரசு அளித்த நிலையில், இதற்கிடையில் தேவையான நிதியை பெற வோடபோன் ஐடியா முயற்சி செய்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக இந்தத் திட்டம் குறித்த பேச்சு வார்த்தை நடந்து வந்தது. தற்போது போதுமான நிதியை திரட்ட முடியாத காரணத்தால் பங்குகள் பெறுகிறது மத்திய அரசு.
33 சதவீத பங்குகள்
பெரும் நஷ்டத்தில் இயங்கும் டெலிகாம் சேவை நிறுவனமான வோடபோன் ஐடியா நிறுவனத்தில் மத்திய அரசு இந்தப் பங்கு மாற்றம் மூலம் சுமார் 33 சதவீத பங்குகளைப் பெற்று ஒற்றைப் பெரிய பங்குதாரராக உயர உள்ளது எனச் சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வோடபோன் - ஆதித்யா பிர்லா
வோடபோன் ஐடியாவின் ப்ரோமோட்டர்களான இங்கிலாந்தின் வோடபோன் குழுமம் மற்றும் இந்தியாவின் ஆதித்யா பிர்லா குழுமம் தற்போது 47.61% மற்றும் 27.38% பங்குகளை வைத்துள்ளன.
பங்கு இருப்பு
இந்த 16000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலுவை தொகைக்கு ஈடான பங்கு மாற்றத்திற்குப் பிறகு, வோடபோன் குழுமம் 31.8 சதவீத பங்குகளையும், ஆதித்யா பிர்லா குழுமம் 18.3% பங்குகளையும் வைத்திருக்கும். இதன் மூலம் இரு ப்ரோமோட்டர்களின் மொத்த பங்கு இருப்பு 50 சதவீதத்திற்கு அருகில் இருக்கும்.
அஸ்வினி வைஷ்ணவ்
ஆதித்யா பிர்லா குழுமம் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கும் தேவையான முதலீடுகளைக் கொண்டு வருவதற்கு உறுதியான உறுதிமொழியைக் கொடுத்துள்ளது. இதனால் 16000 கோடி ரூபாய் நிலுவை தொகைக்குப் பங்குகளாக மாற்றிக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
டெலிகாம் சந்தை
பிஎஸ்என்எல் அல்லாமல் 3 நிறுவனங்கள் கொண்ட டெலிகாம் சந்தையாக இந்தியா இருக்க வேண்டும் என்றும், இதன் மூலம் நுகர்வோர்களுக்கு ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம். இதன் அடிப்படையில் பங்குகளை மாற்ற ஒப்புதல் அளித்ததாக அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
1613.31 கோடி ஈக்விட்டி பங்குகள்
மத்திய அரசு ஒப்புதலை தொடர்ந்து ஈக்விட்டி பங்குகளாக மாற்றப்பட வேண்டிய மொத்தத் தொகை 16,133.18 கோடி ரூபாயாகும். இதற்கு 10 ரூபாய் முக மதிப்புள்ள 1613.31 கோடி ஈக்விட்டி பங்குகளை ரூ.10 வெளியீட்டு விலையில் வெளியிடுமாறு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.