மத்திய அரசுக்குச் சொந்தமான பாரத் பிராட்பேண்ட் நிகாம் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் 16 மாநிலங்களில் உள்ள கிராமங்களை ஆப்டிகல் ஃபைபர் அடிப்படையிலான அதிவேக பிராட்பேண்ட் நெட்வொர்க் சேவை மூலம் இணைப்பதற்காக 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை வெளியிட்டு இருந்தது.
இந்த டெண்டரை கைப்பற்றத் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத காரணத்தால் மத்திய அரசின் உத்தரவின் படி பாரத் பிராட்பேண்ட் நிகாம் இந்த 19000 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை ரத்து செய்துள்ளது.
பாரத்நெட்
மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியில் சுமார் 16 மாநிலங்களில் பாரத்நெட்டின் கீழ் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்கை உருவாக்க 29,430 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
3.61 லட்சம் கிராமங்கள்
16 மாநிலத்தில் இருக்கும் 3.61 லட்சம் கிராமங்களை இணைக்க மத்திய அரசு நம்பகத்தன்மை இடைவெளி நிதியாக 19,041 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்தது. இந்த மாபெரும் திட்டத்தை 9 பேகேஜ்களாகப் பிரித்து டெண்டர் விடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தகுதி இல்லை
இத்திட்டத்தைக் கைப்பற்ற சில விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தாலும், யாரும் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கானத் தகுதியை அடையவில்லை எனக் கூறப்படுகிறது.
ரூ.19000 கோடி டெண்டர்
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் வர்த்தகச் சந்தைக்கும், பெரு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் மத்தியிலான இடைவெளியே குறைக்க இந்தப் பார்த்நெட் பெரிய அளவில் பயன்படும் என நம்பப்பட்ட நிலையில் 19000 கோடி ரூபாய் டெண்டரில் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாதது தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.
அதிவேக இண்டர்நெட் சேவை
பாரத்நெட் திட்டம் 2011ஆம் ஆண்டில் நேஷ்னல் ஆப்டிக்கல் பைபர் நெட்வொர்க் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டம் மூலம் இந்தியாவில் 2013ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் கிராமங்களை அதிவேக இண்டர்நெட் சேவை மூலம் இணைக்கப்பட வேண்டும் என்பது தான். ஆனால் இத்திட்டம் தற்போது 2025 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.