இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகியவை அதிகப்படியான கட்டண நிலுவையிலும், கடன் சுமையில் இருக்கும் காரணத்தால் திவாலாகி விடும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதேவேளையில் புதிதாக டெலிகாம் துறைக்குள் வந்த ஜியோ போதுமான வர்த்தகம் வாடிக்கையாளர்கள் வருவாய் என அனைத்தும் கொண்டு வலிமையான நிலையில் உள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் அடுத்தச் சில காலாண்டில் வோடபோன் ஐடியா நிறுவனம் திவாலாகும், இதனால் அரசுக்கும் வங்கிகளுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான நஷ்டம் ஏற்படும்.
இதைச் சரி செய்யும் விதமாகப் பல வாரங்களாக டெலிகாம் நிறுவனங்களும், மத்திய டெலிகாம் துறை அமைச்சகமும் இணைந்து டெலிகாம் துறை நிறுவனங்களைக் காப்பாற்ற முக்கியமான தளர்வுகளையும் சீர் திருத்த நடவடிக்கைகளுக்கும் இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த வாரம் மத்திய டெலிகாம் அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட டெலிகாம் துறை சீர்திருத்தத் திட்டங்களுக்கு இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒப்புதல் மூலம் வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் பங்குகள் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
4 வருட மோரோடோரியம்
இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள படி டெலிகாம் நிறுவனங்கள் AGR கட்டணத்தை அடுத்த 4 வருடத்திற்கு மோரோடோரியம் சலுகை அளிக்கப்படுகிறது. அதாவது 4 வருடம் AGR நிலுவையைச் செலுத்தத் தேவை இல்லை என்பது தான். அதன் பின்பு குறித்த காலகட்டத்திற்குள் முழுமையாகச் செலுத்த வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
AGR கட்டணத்தைச் செலுத்துவதில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி அடுத்த 10 வருடத்திற்குள் செலுத்த வேண்டும் என்பதில் எவ்விதமான மாற்றமும் இல்லை.
டெலிகாம் அல்லாத வருமான கணக்கீடு
இதேபோல் AGR கட்டண கணக்கீட்டில் இனி வரும் காலகட்டத்தில் டெலிகாம் அல்லாத வருமானத்தைச் சேர்க்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் AGR கட்டணத்தில் பெரும் சுமை குறையும்.
100 சதவீத அன்னிய முதலீடு
டெலிகாம் துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அதுவும் ஆட்டோமேட்டிங் பிரிவு அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள காரணத்தால் அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கும் இது ஜாக்பாட் ஆக விளங்குகிறது.
உரிமம் கட்டணம் மற்றும் ஸ்பெக்டரம் கட்டணம்
இதேபோல் அனைத்து உரிமம் கட்டணம் மற்றும் ஸ்பெக்டரம் கட்டணம் மீதான வட்டி மற்றும் அபராதம் ஆகியவற்றில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இவ்விரண்டின் மீதான அபராதம் நீக்கப்பட்டும், வட்டி அனைத்தும் மாதாந்திர அடிப்படையில் கணக்கீடு செய்யாமல் வருடாந்திர அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ஸ்பெக்ட்ரம் தொகை
மேலும் ஸ்பெக்ட்ரம் வாங்கியதற்கான தொகையை 2019ல் இரண்டு ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டு உள்ள நிலையில் இதை 5 ஆண்டு வரையில் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் கையிருப்புக் காலம்
இதேபோல் தற்போது ஸ்பெக்ட்ரம் வைத்துக்கொள்ளும் காலம் 20 வருடமாக இருக்கும் நிலையில், இதை மேலும் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள தளர்வுகள் அனைத்தும் குறிப்பிட்ட நிறுவனத்தைச் சார்ந்து அல்லாமல் மொத்த டெலிகாம் துறைக்குமானதாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
டெலிகாம் அமைச்சர் அஷ்வின் வைஷ்னவா
இப்படிச் சுமார் 9 தளர்வுகள் டெலிகாம் துறைக்காக ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக டெலிகாம் துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்னவா இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
Vi, ஏர்டெல் பங்குகள்
இந்த அறிவிப்புகள் மூலம் 696.05 ரூபாய்க்குத் துவங்கிய ஏர்டெல் பங்குகள் 734.95 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் வோடபோன் ஐடியா பங்குகள் 8.98 ரூபாய்க்குத் துவங்கி 9.30 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.