இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகளவில் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காக மத்திய நிதியமைச்சகம் எரிபொருள் விலை பாதிப்பைக் குறைக்கும் விதமாகப் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க ஆலோசனை நடத்தி வருகிறது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கடந்த 10 மாதத்தில் கச்சா எண்ணெய் விலை கிட்டதட்ட இரட்டிப்பு வளர்ச்சியை அடைந்துள்ளது, இதன் எதிரொலியாக இந்தியா முழுவதும் ஒரு லிட்டர் சாதாரணப் பெட்ரோல் விலை 100 ரூபாயையும், டீசல் விலை 90 ரூபாயையும் நெருங்கி வருகிறது. எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கிறது.
இந்தியா இறக்குமதி
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா, தனது எரிபொருள் தேவையில் 90 சதவீதத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் வாயிலாகவே பூர்த்தி செய்து வருகிறது.
இரட்டிப்பு வளர்ச்சி
இந்நிலையில் கச்சா எண்ணெய் சந்தையில் உற்பத்தி சரிவு காரணமாக ஏற்பட்டு விலை உயர்ந்து கடந்த 10 மாதத்தில் இதன் விலை இரட்டிப்பு வளர்ச்சி அடைந்துள்ளது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
60 சதவீதம் வரி
மேலும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசல்-ன் ரீடைல் விலையில் 60 சதவீதம் வரியாக மட்டுமே இருக்கும் காரணத்தால் இந்த வரியைக் குறைக்கத் தற்போது மத்திய நிதியமைச்சகம் தலைமையிலான குழு ஆலோசனை செய்து வருகிறது. இதற்காக நிதியமைச்சகம் மாநில அரசுகள், எண்ணெய் நிறுவனங்கள், எண்ணெய் அமைச்சகம் ஆகியோர் உடன் ஆலோசனை செய்து வருகிறது.
வரிக் குறைப்பு
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்பட்டு அதன் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பெட்ரோலியம் துறை அமைச்சர் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் விலை குறையும் எனக் கூறியிருந்தார், இதற்கு ஏற்றார் போல் தற்போது நிதியமைச்சகம் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்திற்குத் தயாராகி வருகிறது.
வரி வருமான பாதிப்பு
மோடி தலைமையிலான அரசு 2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட வர்த்தக மற்றும் வரி வருமான பாதிப்பைச் சமாளிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு எரிபொருள் மீதான கலால் வரியை உயர்த்தியது. இந்த வரி உயர்வு கச்சா எண்ணெய் விலை உயரும் போது மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
கச்சா எண்ணெய் உற்பத்தி
இதற்கிடையில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களும் கூடுதல் வருமானத்திற்குத் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துவிட்டுச் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கித் தான் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது.
OPEC நாடுகள்
இதேவேளையில் அமெரிக்காவில் ஏற்பட்டு உள்ள டீ ப்ரீஸ் நிலை பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 66 டாலர் வரையில் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் உலகச் சந்தைகளில் OPEC அமைப்பு நாடுகள் அதிகளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications