பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் திட்டத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது, இத்திட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக எத்தனால் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைத்துள்ளது.
மத்திய அரசு இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில் இந்த எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விற்பனை மிகவும் முக்கியமானதாகும்.
EBP திட்டம்
மத்திய அரசின் Ethanol Blended Petrol (EBP) திட்டத்தின் படி எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோலில் இனி 10 சதவீதம் வரையில் எத்தனால் கலந்து விற்பனை செய்ய முடியும். இந்தத் திட்டம் 2019 ஏப்ரல் மாதத்தில் இருந்து பயன்பாட்டில் இருக்கிறது.
முக்கியமான காரணம்
EBP திட்டம் கொண்ட வர மிக முக்கியமான காரணம் பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருள்-ஐ உருவாக்க வேண்டும் அதேநேரத்தில் சுற்றுசூழல்-க்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பது தான். இத்திட்டம் மூலம் அரசின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவுகள் படிப்படியாகக் குறைவது மட்டும் அல்லாமல் விவசாயிகளுக்கும் அதிகப்படியான நன்மையும் உண்டு.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நவம்பர் மாதம் நடந்த முக்கியப் பொருளாதார விவகார கூட்டத்தில் மத்திய அரசு எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை தயாரிக்கப் பொதுத்துறை கச்சா எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்கள் நேரடியாக எத்தனால் (Ethanol) வாங்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
நேரடி கொள்முதல்
இதன் மூலம் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் நேரடியாக Ethanol உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எத்தனால் வாங்க முடியும். இதற்கு முன் அரசு கைப்பற்றிக் கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்தது.
கரும்பு விவசாயிகள்
எத்தனால் (Ethanol)-ஐ கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் காரணத்தால் கரும்பு விவசாயிகள் பலன் பெரும் வகையில் டிசம்பர் முதல் துவங்க இருக்கும் எண்ணெய் நிறுவனத்தின் மார்கெட்டிங் வருடத்திற்கு ஒரு லிட்டர் எத்தனால் விலையை 1.47 ரூபாய் அதிகரிக்க நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வு
இந்த விலை உயர்வு மூலம் சி ஹெவி மொலாசஸ் எத்தனால் விலை லிட்டருக்கு 46.66 ரூபாயாகவும், பி ஹெவி மொலாசஸ் எத்தனால் விலை லிட்டருக்கு 59.08 ரூபாயாகவும், கரும்பு சாறு மற்றும் சர்க்கரை பாகு-வில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் விலை 63.45 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
2025 இலக்கு
இந்தியாவில் Ethanol Blended Petrol (EBP) திட்டத்தின் கீழ் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவீடு 2020-21 மார்கெட்டிங் வருடத்தில் 8 சதவீத அளவீட்டைத் தொட்டது. இதன் மூலம் வரும் ஆண்டில் 10 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. மேலும் 2025ஆம் ஆண்டுக்குள் இந்த அளவு 20 சதவீதம் வரையில் உயர்த்த மத்திய அரசு இலக்கு நிரண்யம் செய்துள்ளது.
ஜிஎஸ்டி வரிக் குறைப்பு
தற்போது மத்திய அரசு எத்தனால் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து வெறும் 5 சதவீதமாகக் குறைந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் மத்திய அரசால் பெட்ரோல் டீசல் விலையைக் குறைவான விலைக்குக் கொடுக்க முடியும்.