நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட திடீர் உயர்வின் மூலம் அதிகப்படியான லாபத்தைப் பார்த்து வந்த இந்திய நிறுவனங்களிடம் இருந்து கூடுதலான வருமானத்தை ஈர்க்க விண்ட்ஃபால் டாக்ஸ் விதித்தது.
இந்த வரி கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி செய்யப்படும் நிறுவனங்களின் வருமானத்தைக் கடுமையாகப் பாதித்தது. இந்நிலையில் மத்திய அரசு கடந்த ஒரு மாதத்தில் 2வது முறையாக வரியைக் குறைத்துள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் விற்பனை மீது விதிக்கப்பட்ட விண்ட்ஃபால் டாக்ஸ் ஒரு டன்னுக்கு 17,750 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த இரண்டு வாரங்களாக, ஒரு டன்னுக்கு 17,000 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டீசல் ஏற்றுமதி
மேலும் டீசல் ஏற்றுமதி மீதான செஸ் வரியை லிட்டருக்கு 11 ரூபாயில் இருந்து 5 ரூபாயாகக் குறைக்கப்பட்டது, இதேபோல் விமான எரிபொருள் (ATF) ஏற்றுமதி மீதான செஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு வாரங்களாக, ATF ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு 4 ரூபாயாக இருந்தது.
பெட்ரோல் ஏற்றுமதி
வழக்கம் போல் விண்ட்ஃபால் டாக்ஸ் இல்லாமல் பெட்ரோல் ஏற்றுமதி இந்தியாவில் தொடரும். மேலும் இப்புதிய கட்டணங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 2 நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்த வரிக் குறைப்பு மூலம் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு அதிக லாபம் கிடைக்க உள்ளது.
ரிலையன்ஸ், நயாரா எனர்ஜி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நயாரா எனர்ஜி லிமிடெட் ஆகிய சுத்திகரிப்பு நிறுவனங்கள், இந்தியாவின் ஒட்டுமொத்த பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதியில் 80% முதல் 85% வரையிலான ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த வரித் தளர்வு ரிலையன்ஸ் மற்றும் நயாரா எனர்ஜி-க்கு ஜாக்பாட் தான்.
ONGC நிறுவனம்
இந்தியாவில் இருந்து மிகவும் குறைந்த அளவிலான கச்சா எண்ணெய் மட்டுமே உற்பத்தியும், ஏற்றுமதியும் செய்யப்படுகிறது என்றாலும், கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முன்னணி நிறுவனமாக இருப்பது ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப் (ONGC) நிறுவனம் தான். இந்த வரி உயர்வு மூலம் ONGC நிறுவனத்தின் வருமானம் மற்றும் ஏற்றுமதி குறைந்தாலும், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும்.
விண்ட்ஃபால் டாக்ஸ்
விண்ட்ஃபால் டாக்ஸ் (windfall tax) என்பது ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது தொழில்துறைக்குத் திடீரென அதிகப்படியான லாபம் கிடைக்கும் போது, இதில் இருந்து அரசு கூடுதலான வரி வருமானத்தைப் பெற விதிக்கப்படும் அதிகப்படியான வரி.
மார்ச் மாதம்
மார்ச் காலாண்டில் ONGC போன்ற கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன. இதற்கு முக்கியக் காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு பேரலுக்கு 139 டாலராக ஆக உயர்ந்தது.