உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடான சீனா தனது ஏற்றுமதியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், அதிகப்படியான பொருட்களை ஏற்றுமதி செய்யவும் கடந்த 3 வருடமாக மாறுபட்ட வர்த்தக உத்தியை கையாண்டு வருகிறது.
இதை ஒடுக்கும் வகையில் இந்தியா முக்கியமான திட்டத்தைக் கையில் எடுக்க முடிவு செய்துள்ளது மட்டும் அல்லாமல் இதற்காக முக்கிய ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்த முடிவு செய்துள்ளது.
இத்திட்டம் உறுதியாகி நடைமுறைக்கு வந்தால் இந்தியா முழுவதும் புதிய உற்பத்தி துறை உருவாவது மட்டும் அல்லாமல் நாட்டின் ஏற்றுமதி வேகமாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டெய்னர் உற்பத்தி
மத்திய அரசு இந்தியாவில் உற்பத்தி பகுதிகளை மையமாக வைத்து கண்டெய்னர் உற்பத்தி தளத்தை அமைக்கும் திட்டத்தை உருவாக்கி வருகிறது. இத்திட்டம் மூலம் உலகளவில் நிலவும் கண்டெய்னர் தட்டுப்பாட்டை இந்தியா தீர்ப்பது மட்டும் அல்லாமல் இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவித்து, ஏற்றுமதி அளவை இருமடங்கு உயர்த்த முடியும்.
கண்டெய்னர் தட்டுப்பாடு
சர்வதேச சந்தையில் கண்டெய்னர் தட்டுப்பாடு உருவாக முக்கியமான காரணம் சீன அரசு நிறுவனங்களும், சீன உற்பத்தி நிறுவனங்களும் தங்களது ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்த உலகம் முழுவதிலும் இருக்கும் காலி கண்டெய்னர்-களை அதிகளவில் சீனாவிற்குக் கொண்டு சென்று வருகிறது.
சீனாவின் சதி
இதனால் பிற நாட்டு உற்பத்தி பொருட்களைச் சர்வதேச சந்தையில் கொண்டுவர தாமதம் ஆவது மட்டும் அல்லாமல் விலையும் அதிகரிக்கிறது. இதன் மூலம் அமெரிக்கா முதல் இந்தியா வரையில் அனைத்து நாடுகளும், நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பெரும் பிரச்சனையைச் சமாளிக்கவே தற்போது மத்திய அரசு முக்கியத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
முக்கிய உற்பத்தி பகுதி
இந்தியாவில் கண்டெய்னர் உற்பத்தியை முக்கிய உற்பத்தி பகுதியை சார்ந்து அமைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது. இத்திட்டத்திற்காக ரயில்வே துறையில் கண்டெய்னர் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா நிறுவனம், மத்திய ஷிப்பிங் அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.
அரசு ஆலோசனை கூட்டம்
இத்திட்டத்திற்காகக் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் அந்தந்த அமைச்சக அதிகாரிகள் உடன் முக்கியமான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
50,000 கண்டெய்னர் தேவை
இந்த ஆலோசனை கூட்டத்தில் கண்டெய்னர் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் இந்தியாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியைப் பூர்த்திச் செய்ய அடுத்த 3 வருடத்திற்குச் சுமார் 50,000 கண்டெய்னர் தேவை எனக் கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது வளர்ச்சி அடையும் துறை என்பதால் இந்தியாவில் முக்கிய உற்பத்தித் துறையாக மாறவும் வாய்ப்புகள் உள்ளது.