பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் பலன் அளிக்கும் வகையில் நாட்டின் தற்போதைய பணவீக்கத்தின் அடிப்படையில் அகவிலைப்படியை 4 சதவீதம் வரையில் உயர்த்த திட்டமிட்டுள்ளது, இதோடு அகவிலைப்படி விலக்கு அளவீட்டையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான இறுதி அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வரும் பட்சத்தில் சுமார் 50 லட்ச அரசு ஊழியர்களும், 61 லட்ச ஒய்வூதியதாரர்களும் பெரிய அளவிலான நன்மையை அடைவார்கள்
மத்திய அரசு தற்போது திட்டமிட்டுள்ள படி அகவிலைப்படியில் 4 சதவீதம் உயர்த்தும் பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது இருக்கும் 17 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயரும். மேலும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாகும் பட்சத்தில் ஜனவரி 2021 முதல் இது அமலாக்கம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்னதாகவே மத்திய அரசு ஊழியர்கள் அமைப்பு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் அரசு ஊழியர்களுக்கு நாட்டின் 28 சதவீத பணவீக்கத்தின் அடிப்படையில் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் வாயிலாகவே தற்போது அகவிலைப்படியை உயர்த்த திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஏப்ரல் 2020ல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த திட்டமிடப்பட்ட நிலையில் கொரோனா தொற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பாதிப்புத் தற்காலிகமாக ஒத்துவைத்தது. இதனால் 50 லட்ச ஊழியர்களும், 61 லட்ச ஒய்வூதியதாரர்களும் இதற்கான பலனை அனுபவிக்க முடியாமல் போனது.
இதனால் ஒரு வருட காலத்திற்கான அகவிலைப்படி வருமானத்தை ஊழியர்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டது.