பிரதமர் நரேந்திர மோடியின் 2வது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் கடைசி முழுப் பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் நடக்கும் காரணத்தால் 2024ல் இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையை மட்டுமே மோடி அரசால் தாக்கல் செய்ய முடியும்.
இதனால் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கைக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் உள்ளது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மார்ச் வரையிலான நிதியாண்டில் இந்திய அரசு 16 லட்சம் கோடி ரூபாய் வரையிலான தொகையைக் கடனாகப் பெறும் என்று ராய்ட்டர்ஸ் பொருளாதார வல்லுனர்களின் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. 16 லட்சம் கோடி ரூபாய் என்றால் இன்றைய டாலர் மதிப்பில் 198 பில்லியன் டாலர்.
பட்ஜெட் 2023
2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு திட்ட அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் முக்கியக் கவனத்தைப் பெற உள்ளது.
நிதிப் பற்றாக்குறை
இதேபோல் நாட்டின நிதிப் பற்றாக்குறை அளவீட்டைக் கட்டுப்படுத்த மத்திய நிதியமைச்சகம் இந்த 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை முக்கியக் கவனம் பெறுகிறது.
மத்திய அரசின் மொத்தக் கடன்
பிரதமர் நரேந்திர மோடி அரசு கொரோனா தொற்றுநோய் பாதிப்பில் இருந்து பொருளாதாரப் பாதிப்புகளைத் தணிக்கவும், ஏழை மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அதிகப்படியான தொகையைச் செலவிட்டதால், கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசின் மொத்தக் கடன் இருமடங்காக அதிகரித்துள்ளது.
வரி, பொருளாதாரம்
இதேவேளையில் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் வரி வருவாய் சரிவு மற்றும் அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைவது போன்ற முக்கியமான பிரச்சனை காரணமாக மத்திய அரசால் கடன் வாங்குவதைக் குறைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
16.0 லட்சம் கோடி ரூபாய்
ராய்ட்டர்ஸ் சுமார் 43 பொருளாதார நிபுணர்களின் சராசரிக் கணிப்பின்படி, அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்தக் கடன் அளவு 16.0 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கணிப்பில் பொருளாதார வல்லுனர்கள் 14.8 லட்சம் கோடி முதல் 17.2 லட்சம் கோடி வரையில் கடன் வாங்கக்கூடும் எனக் கணித்துள்ளது.
2014 மோடி ஆட்சி
2014-ல் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்தபோது, நாட்டின் மொத்த ஆண்டு 5.92 லட்சம் கோடி ரூபாய் அளவில் கடன் வாங்கியது. தற்போது 16 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
கடனுக்கான தவணை
இந்திய அரசு கடனுக்கான தவணையைச் செலுத்த வேண்டியது அதிகமாக இருக்கும் காரணத்தால் அதிகக் கடன்களை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. 2023-24 ஆம் ஆண்டு மட்டும் 4.4 லட்சம் கோடி ரூபாய் திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும் என ANZ பொருளாதார வல்லனர் தீராஜ் நிம் தெரிவித்துள்ளார்.
நிதி பற்றாக்குறை
இதேபோல் இந்தியாவின் நிதி பற்றாக்குறை 2023 - 24 ஆம் நிதியாண்டில் ஜிடிபி-யில் 6 சதவீதமாகக் குறைக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது, இதேபோல் 2025 - 26 ஆம் நிதியாண்டில் 4.5 சதவீதமாகக் குறைக்க அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்தியா - உலகின் தொழிற்சாலை
இதேபோல் இந்தியா அடுத்த சீனாவாக மாறவும், உலகின் தொழிற்சாலையாக மாறவும் இந்தியாவின் உள்கட்டமைப்பை மிகப்பெரிய அளவில் மேம்படுத்த வேண்டும், இதற்குக் கட்டாயம் பெரும் தொகையை முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.