இந்தியாவையும், இந்திய மக்களையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ள பொருளாதாரச் சரிவில் இருந்து மீண்டு வர பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கை மிகவும் முக்கியமானதாக உள்ளது.
பல துறைகள் இன்னும் கொரோனா மற்றும் லாக்டவுன் பாதிப்பில் இருந்து வெளியில் வராத நிலையில் பல வளர்ச்சி திட்டங்கள் 2021-21நிதியாண்டுக்கான பட்ஜெட்-ல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் நாட்டு மக்களுக்குக் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வாங்குவதற்கு மிகப்பெரிய அளவிலான நிதி தேவை உள்ளது. இதை மத்திய அரசு எப்படிச் சமாளிக்கப்போகிறது எனக் கேள்வி எழுந்த நிலையில் தற்போது மோடி தலைமையிலான அரசு இதற்கான புதிய வழியைக் கண்டுப்பிடித்துள்ளது.
130 கோடி மக்கள்
இந்தியப் பொருளாதாரமும், வர்த்தகச் சந்தையும் தற்போது இருக்கும் நிலையில் நாட்டின் 130 கோடி மக்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்து வாங்குவது என்பது சாதாரணக் காரியம் இல்லை. இதற்கு முக்கியக் காரணம் நாட்டின் நிதிப் பற்றாக்குறை ஏற்கனவே 10 சதவீதத்தைத் தாண்டியுள்ளது, இதேபோல் நிதி உட்செலுத்தலில் முக்கியப் பங்கு வகிக்கும் வங்கிகளும் மோசமான நிதிநிலையில் உள்ளது.
57,200 கோடி ரூபாய்
இந்தச் சூழ்நிலையில் 130 கோடி மக்களுக்குச் சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது கொரோனா தடுப்பு மருத்தை 3 டாலர் வீதம் ஒருவருக்கு தலா 2 முறை செலுத்த வேண்டும் என்றால் சுமார் 57,200 கோடி ரூபாய் நிதி தேவை. இது மருந்துக்கான செலவு மட்டுமே இதைத் தவிர்த்து உள்கட்டமைப்பு, போக்குவரத்து, ஊழியர்கள் சம்பளம், ஊழியர்கள் பாதுகாப்புத் தேவைகள் எனப் பல உண்டு.
வளர்ச்சி திட்டங்கள்
மத்திய அரசு ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான ஊக்கத் திட்டங்களை அறிவித்த நிலையில், கணிப்புகளுக்கு ஏற்ற வளர்ச்சியை அடையவில்லை. இதுமட்டும் அல்லாமல் டிசம்பர் மாதம் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டுள்ளது.
முக்கியப் பிரச்சனை
இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு 2020ல் சந்தித்த வரி வருமான சரிவையும், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான நிதியைத் திரட்டும் புதிய திட்டத்தை வகுத்துள்ளதாகவும், அதற்கான ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
கொரோனாவைரஸ் செஸ்
பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் அறிக்கையில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட கூடுதல் செலவுகள், வரி வருமான இழப்பு மற்றும் தடுப்பு மருந்துக்கான நிதி ஆகியவற்றைத் திரட்டும் வகையில் கொரோனாவைரஸ் செஸ் அல்லது கூடுதல் வரி விதிக்கத் திட்டமிட்டு மத்திய நிதியமைச்சகமும், மத்திய அரசும் ஆலோசனை செய்து வருவதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 1 இறுதி அறிவிப்பு
இந்நிலையில் இந்த ஆலோசனையின் முடிவில் கொரோனாவைரஸ் செஸ் விதிக்கப்படுமா என்ற இறுதி அறிவிப்பை பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்தப் புதிய கொரோனா வைரஸ் செஸ் வரி குறித்து உங்கள் கருத்து என்ன என்பதைக் கமெண்ட் பதிவிடும் இடத்தில் தெரிவிக்கவும்.