பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சொத்துகள் மற்றும் நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல், நீண்ட காலக் குத்தகை ஒப்பந்தம் வாயிலாக நாட்டின் வளர்ச்சி திட்டத்திற்கான நிதியை சேர்க்க மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளது.
இந்நிலையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் தனியார்மயமாக்கல் திட்டத்தில் முக்கியமான முடிவை எடுத்துள்ளது மத்திய அரசு.
எல்ஐசி ஐபிஓ
இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ மற்றும் ஐபிஓ-வில் கணிக்கப்பட்ட இலக்கை அடைய முடியாத காரணத்தால் 9 சதவீத தள்ளுபடி விலையில் செவ்வாய்க்கிழமை பட்டியலிடப்பட்டது. இது மத்திய அரசின் பல கனவுகளுக்குப் பெரும் தடையாக விளங்குகிறது.
பாரத் பெட்ரோலியம்
எல்ஐசி ஐபிஓ கிட்டதட்ட தோல்வி என்று அறிவிக்கும் நிலையில், மத்திய அரசின் முக்கியமான திட்டமாக விளங்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது. என்ன காரணம் தெரியுமா..?
மத்திய அரசு
இந்திய ரீடைல் எரிபொருள் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பனை செய்வது மூலம் அதிகப்படியான நிதியும் கிடைக்கும், இந்நிறுவனத்தை வாங்க இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மத்தியில் அதிகப்படியான போட்டி இருக்கும் எனக் கணிக்கப்பட்டது.
3 நிறுவனங்கள்
ஆனால் தற்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைக் கைப்பற்ற 3 நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பம் கொடுத்த நிலையில், 2 நிறுவனங்களால் வங்கிகளிடம் இருந்து நிதி உத்தரவாதத்தைப் பெற முடியாத காரணத்தால் 2 விண்ணப்பதாரர்கள் ஆரம்பக்கட்டத்திலேயே வெளியேறிய நிலையில், இறுதியில் ஒரு விண்ணப்பதாரர் மட்டுமே இருந்த காரணத்தால் தனியார்மயமாக்கல் திட்டத்தைக் கைவிட்டது மத்திய அரசு.
அனில் அகர்வாலின் வேதாந்தா
மத்திய அரசு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகக் கைவிட்டு உள்ளது என அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைக் கைப்பற்ற தேர்வு பெற்ற ஓரே ஒரு நிறுவனம் அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம்.