உலகிலேயே மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இருக்கும் இந்தியாவில், உள்நாட்டு நிறுவனங்களைக் காட்டிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் தான் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
இதனால் இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் வர்த்தகம் நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருவது மட்டும் அல்லாமல் தற்போது பெரும் நிதி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுப் புதிய முதலீடுகளைக் கூட ஈர்க்க முடியாமல் தவித்து வருகிறது.
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக மோடி அரசு முக்கியமான முடிவை எடுக்கத் திட்டமிட்டு வருகிறது.
ஸ்மார்ட்போன் விற்பனை
இந்திய ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் 12000 ரூபாய்க்குக் கீழ் இருக்கும் மொபைல்-களின் விற்பனை 3ல் ஒரு பங்கு, இதே வேளையில் இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் பெரும்பாலான தயாரிப்புகள் 12000 ரூபாய் அதாவது 150 டாலருக்குக் கீழ் உள்ள போன்கள் தான்.
12000 ரூபாய்
இதேவேளையில் இந்த 12000 ரூபாய்க்கு குறைவாக இருக்கும் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் சீன நிறுவனங்கள் சுமார் 80 சதவீத வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது. இந்த நிலையில் சீன நிறுவனங்களுக்கு பதிலாக இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்து புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது மோடி அரசு.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்
மோடி அரசு 12,000 ரூபாய்க்குக் கீழ் இருக்கும் ஸ்மார்ட்போன் பிரிவில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தனது தயாரிப்பை விற்பனை செய்யத் தடை விதிக்கத் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் இந்த வர்த்தகச் சந்தையை lava மற்றும் Micromax ஆகியவை கைப்பற்றி வர்த்தகம் மற்றும் உற்பத்தியை அதிகரித்து இந்தியாவுக்குப் பலன் அளிக்கும்.
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்
இதேபோல் இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களை மத்திய அரசு உற்பத்தி, விநியோகம் என அனைத்து பிரிவுகளிலும் இந்தியர்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்-ஐ வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
2015 டூ 2022
12,000 ரூபாய்க்குக் கீழ் இருக்கும் ஸ்மார்ட்போன் சந்தையில் 2015ல் Lava, Micromax, Intex மற்றும் Karbonn ஆகியவை 35 சதவீத வர்த்தகத்தைக் கொண்டு இருந்தது. ஆனால் தற்போது வெறும் 1 சதவீதம் மட்டுமே கொண்டு உள்ளது. இந்த நிலையை மாற்றவே மத்திய அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது, ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.