இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிறைந்த காலகட்டத்தில் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தை மிகலும் மோசமான நிலையை அடைந்தது அனைவருக்கும் தெரியும். ஈபிஎப்ஓ தரவுகள் படி லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது வகைப்படுத்தப்பட்ட துறைக்கான தரவுகள் மட்டுமே, ஆனால் வகைப்படுத்தாத துறையில் பல கோடி மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளது மறந்துவிட முடியாது.
இந்நிலையில் மத்திய அரசு வருகிற ஜூன் 2021க்குள் இந்தியாவில் புதிதாக 50 முதல் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
3வது பொருளாதார ஊக்கக் கொள்கை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் வெளியிட்ட 3வது பொருளாதார ஊக்கக் கொள்கை திட்டம் உற்பத்தித் துறைக்கும் வேலைவாய்ப்பு சந்தைக்கும் நம்பிக்கையைக் கொடுத்தாலும், உடனடி பொருளாதார வளர்ச்சிக்குப் போதுமானதாக இல்லை.
ஆனால் வேலைவாய்ப்புகளை உருவாக்க அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது
ABRY திட்டம்
இந்நிலையில் மத்திய அரசு Atma Nirbhar Bharat Rozgar Yojana (ABRY) திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் அடுத்த 7 மாதத்திற்குள் அதாவது ஜூன் 2021க்குள் சுமார் 50 முதல் 60 லட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிறுவனங்களுக்கு லாபம்
Atma Nirbhar Bharat Rozgar Yojana (ABRY) திட்டத்தின் கீழ் EPFO மானியம் பெற வேண்டும் என்றால் தனியார் நிறுவனங்கள் அக்டோபர் 2020 முதல் ஜூன் 2021 வரையிலான காலத்திற்கு ஊழியர்கள் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும்.
மத்திய அரசு தனியார் நிறுவனங்களில் சேர்க்கப்படும் ஊழியர்கள் எண்ணிக்கையைத் தனிப்பட்ட முறையில் கவனிக்க உள்ளது.
2 முதல் 5 வேலைவாய்ப்புகள்
செப்டம்பர் 2020ஆம் தேதி படி ஒரு நிறுவனத்தில் 50 ஊழியர்களுக்குக் குறைவாக இருந்தால் மாதம் 2 பேருக்கு வேலைவாய்ப்பும், 50 ஊழியர்களுக்கு அதிகமாக இருந்தால் மாதம் 5 பேருக்கு வேலைவாய்ப்பும் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
அக்டோபர் 2020 முதல் ஜூன் 2021 வரையிலான காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட அளவிலான வேலைவாய்ப்புகளை 15,000 ரூபாய் அதிகமாகச் சம்பளத்திற்குப் பணியில் அமர்த்துவதன் மூலம் நிறுவனங்களுக்கு மானியம் கிடைக்கும்.
மானியம்
அப்படி நிறுவனங்கள் புதிய ஊழியர்கள் பணியில் அமர்த்துவதன் மூலம் தத்தம் ஊழியர்களுக்கான 2 வருட ஓய்வூதிய நிதியை அரசு நிறுவனங்களுக்கு மானியமாகக் கொடுக்க உள்ளது.
இதன் படி ஊழியர்களின் 12 சதவீத அடிப்படை சம்பளமும், நிறுவனங்களின் பிடியில் இருந்து 12 சதவீதம் என மொத்த 24 சதவீத சம்பளம் மானியமாகக் கிடைக்கும்.
குறைந்தபட்ச வேலைவாய்ப்புகள்
மத்திய அரசின் இந்த Atma Nirbhar Bharat Rozgar Yojana (ABRY) திட்டத்தின் மூலம் நாட்டின் குறைந்தபட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்க போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நம்புகிறது.