பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் அறிக்கையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 50 பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 5 முதல் 10 சதவீதம் வரையில் உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இந்த முடிவின் படி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக்ஸ் உதிரிப்பாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகள் மீதான இறக்குமதி வரியை உயர்த்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வரி உயர்வு குறித்த அறிவிப்பை பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு உற்பத்தி
இந்த வரி உயர்வு மூலம் இந்தியாவில் உற்பத்தியை ஊக்குவிப்பது மட்டும் அல்லாமல் இந்தியாவில் வர்த்தகம் செய்யும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து தயாரிப்புகளையும் இந்தியாவிலேயே தயாரித்து இறக்குமதியைக் குறைக்கும் முயற்சி இந்த முடிவின் மூலம் எடுத்துள்ளது மத்திய அரசு.
20,000 கோடி ரூபாய் வருமானம்
மேலும் இப்புதிய வரி விதிப்பின் மூலம் மத்திய அரசு ஆண்டுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய் அளவிலான கூடுதல் வரி வருமானத்தைப் பெற முடியும் எனக் கணக்கிட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றுக் காரணமாக மத்திய அரசு
எதிர்கொண்ட வரி வருமான சரிவை ஈடு செய்ய முடியும் எனவும் நம்புகிறது.
பர்னீச்சர் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள்
தற்போது மத்திய அரசு பட்டியலிட்டுள்ள 50 பொருட்களில் ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக்ஸ் உதிரிப்பாகங்கள், ஏசி, ஃபிரிட்ஜ் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் மீது மட்டும் அல்லாமல், பர்னீச்சர் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதும் விதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐகியா மற்றும் டெஸ்லா
இதனால் இந்தியாவில் அதிரடியாக வர்த்தக விரிவாக்கம் செய்து வரும் ஸ்வீடன் நாட்டின் முன்னணி பர்னீச்சர் நிறுவனமான ஐகியா மற்றும் இந்தியாவில் புதிதாக அலுவலகத்தைத் துவங்கியுள்ள டெஸ்லா நிறுவனத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன் விலை
இதேபோல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் பெரும்பாலான நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும். இதனால் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.