உலகம் முழுவதும் இருக்கும் வல்லரசு நாடுகள் பணவீக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மோசமான நிலையை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் இந்தியா மட்டும் திறம்படச் சமாளித்து வருகிறது, இதற்கு முக்கியக் காரணம் விளாடிமிர் புதின் கொடுத்த ஆஃபர் தான்.
ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய நாளில் இருந்து பல நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது அதிலும் குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு, உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, உற்பத்தி பொருட்கள் தட்டுப்பாடு எனப் பலவற்றின் மூலம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியா பெரும்பாலான விஷயத்தில் இருந்து தப்பித்து வருகிறது என்றால் மிகையில்லை.
இந்த நிலையில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் ரஷ்யா அதிகப்படியான நிதி தேவையில் உள்ளது. இந்த நிலையில் தான் விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முடிவு செய்தது.
ரஷ்யா - இந்தியா
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த காரணத்தால் பெரும்பாலான நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்துள்ள நிலையில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க சில எண்ணிக்கையிலான நாடுகள் மட்டுமே உள்ளது, அதில் முக்கியமாக இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் இறக்குமதி
இந்தியாவும் உலகின் பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாக இருந்த வேளையில் இரு தரப்புக்கும் லாபமாக மாறியது. உக்ரைன் போருக்கு பின்பு இந்தியா ரஷ்யா மத்தியிலான ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் எப்போதும் இல்லாத வகையில் 150 சதவீதம் வரையில் உயர்ந்தது.
35,000 கோடி ரூபாய்
இதில் முக்கிய வர்த்தகப் பொருளாக இருந்தது கச்சா எண்ணெய் தான். இப்படியிருக்கையில் இந்தியா ரஷ்யா மத்தியிலான கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் மட்டும், இந்தியாவுக்குச் சுமார் 35,000 கோடி ரூபாய் தொகை தள்ளுபடி மூலம் லாபமாகக் கிடைத்துள்ளது.
சப்ளையர்கள்
இது இந்தியாவுக்கு லாபமாக மாறிய நிலையில் பல ஆண்டுகளாக இந்தியா-வின் கச்சா எண்ணெய் சப்ளையர்கள் நாடுகளின் பட்டியலில் அரபு நாடுகள் ஆதிக்கம் செலுத்திய நிலையில் ரஷ்யா ஜூன் மாதம் 2வது இடத்திற்கு முன்னேறியது.
நட்புறவு மற்றும் நிதி நிலை
ரஷ்யா-விடம் கச்சா எண்ணெய் வாங்கியதைப் பல நாடுகள் எதிர்த்த நிலையிலும் இந்தியா தனது நட்புறவு மற்றும் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
டாலர் வேண்டாம்
மேலும் இந்தியா - ரஷ்யா மத்தியிலான வர்த்தகத்தை அனைத்து துறையிலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக இரு நாடுகள் ஒப்புதல் உடன் டாலர் அல்லாமல் உள்நாட்டு நாணயத்தில் வர்த்தகம் செய்ய முடிவு செய்யப்பட்டு இதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்காக இந்திய வங்கிகள் ரஷ்யாவிலும், ரஷ்ய வங்கிகள் இந்தியாவிலும் கணக்குகளைத் திறந்து வருகிறது.