உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசிடமும், நித்தி அயோக் அமைப்பிடமும் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் கார்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும் எனவும், இதனால் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனக் கடிதம் அனுப்பியது.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்குவதற்காகப் பெங்களூரில் இந்திய கிளை நிறுவனத்தைப் பல மாதங்களுக்கு முன்பாகத் துவங்கியது. ஆனால் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரி அதிகமாக இருக்கும் காரணத்தால் விற்பனையைத் துவங்காமல் உள்ளது.
இந்நிலையில் டெஸ்லாவின் கடிதத்திற்கு அரசு சிறப்பான பதிலை அளித்துள்ளது.
மோடி அரசு
மோடி தலைமையிலான அரசு டெஸ்லா-வின் கோரிக்கையை ஏற்றுள்ளது, இதற்கான பதிலில் அரசு டெஸ்லாவுக்கு ஒரு முக்கியமான வாய்ப்பையும் அளித்துள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்கிறோம், இதர பல சலுகையும் அளிக்கத் தயார்.. ஆனா....
டெஸ்லா தொழிற்சாலை
ஆனா.. இந்தியாவில் டெஸ்லா கார்களை உற்பத்தி செய்து விற்பனையும், ஏற்றுமதி செய்தால் கட்டாயம் இறக்குமதி வரியைக் குறைக்கப்படும் என அரசு டெஸ்லாவின் கோரிக்கைக்குப் பதில் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசின் கோரிக்கையை டெஸ்லா ஏற்குமா என்றால் சந்தேகம் தான்.
காரணம்
எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா ஏற்கனவே அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் புதிய தொழிற்சாலையை அமைத்து வருகிறது, சீன தொழிற்சாலையில் இருந்து ஆசிய முழுவதும் ஏற்றுமதி செய்து வருகிறது. இதுபோக ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தைக்கும் தேவையான கார்களைத் தயாரிக்க ஜெர்மனியில் தொழிற்சாலையை அமைத்து வருகிறது.
இந்தியாவில் புதிய தொழிற்சாலை..?!
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் தொழிற்சாலை என்பது டெஸ்லாவுக்குக் கூடுதல் சுமையாக மட்டும் அல்லாமல் தேவையற்றதாகவும் இருக்கும். இதுமட்டும் அல்லாமல் எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி தொழிற்சாலையும் தனியாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
ஜிகா பிரஸ் டெக்னாலஜி
மேலும் கார்களுக்கான பாடியை உருவாக்க ஜிகா பிரஸ் என்ற புதிய ஐடியாவை அமெரிக்கா டெஸ்லா தொழிற்சாலையிலேயே கட்டமைத்து வருகிறது டெஸ்லா. இந்த ஜிகா பிரஸ் மூலம் ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைப்பது மட்டும் அல்லாமல் உற்பத்தியின் வேகம் அதிகரிக்கும்.
மக்களுக்கு ஜாக்பாட்
இந்தியாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் தொழிற்சாலையை அமைத்தால் எலக்ட்ரிக் வாகனங்கள் மீது தீரா காதல் கொண்டுள்ள இந்தியர்களுக்கு ஜாக்பாட் ஆக இருக்கும். அனைத்து முடிவுகளையும் எலான் மஸ்க் நிர்வாகம் தான் எடுக்க வேண்டும்.
எலக்ட்ரிக் வாகனங்கள், கிளீன் எனர்ஜி
இந்தியாவில் மோடி தலைமையிலான அரசு எலக்ட்ரிக் வாகனங்கள், கிளீன் எனர்ஜி ஆகியவற்றுக்குள் அதிகளவிலான முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதனால் டெஸ்லா இந்தியாவிற்கு வந்தால் மற்ற நிறுவனங்களைத் தாண்டிலும் கூடுதலான வரவேற்பையும், சலுகையும் அரசு கொடுக்கும்.