இந்தியாவில் கடந்த சில வாரங்களாகப் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி வருகிறது, ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் என்பது இந்திய வரலாற்றில் உச்சக்கட்ட விலை. இதனால் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என மக்களும், மாநில அரசுகளும் நெருக்கடி அளித்து வருகிறது.
ஆனால் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பெட்ரோலியம் பொருட்கள் மீதான வரியைக் குறைக்க முடியாத நிலையில் அரசு உள்ளதாகவும், இதற்குக் காரணம் மன்மோகன் சிங் தலைமையிலான முந்திய காங்கிரஸ் அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்த எண்ணெய் பத்திரங்கள் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளது.
எண்ணெய் பத்திரங்கள் என்றால் என்ன..?!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கக் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கும்.
இந்த மானிய தொகையை அரசு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குப் பத்திரங்களாக வழங்கும்.
பத்திர முதிர்வு காலம்
இந்தப் பத்திரங்கள் 15 முதல் 20 ஆண்டுக் காலம் வரையில் முதிர்வு காலம் கொண்டு இருக்கும் காரணத்தால் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குக் குறித்த தொகைக்கு வட்டி தொகையும் அரசு செலுத்த வேண்டும்.
மானிய தொகை
காங்கிரஸ் அரசு சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மானிய தொகைக்கு அரசு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குப் பத்திரங்களாக வழங்கியுள்ளது. இந்தப் பத்திர வழங்குவதன் மூலம் அரசு தனது நிதி நெருக்கடி நிலையை ஒத்திவைக்க முடியும். இல்லையெனில் அரசின் வருமானம் அல்லது செலவுகள் அதிகரிக்கும்.
நிதி நெருக்கடி
இந்த எண்ணெய் பத்திரங்கள் மூலம் தற்காலிகமாக நிதி நெருக்கடியை ஒதுக்கிவைத்தாலும், அரசின் கடன் அளவை அதிகரிக்கும், அதேபோல் அடுத்தடுத்த ஆண்டுகளில் வட்டி தொகை செலுத்துதல், பத்திர தொகை செலுத்துதல் என நிதி நெருக்கடியை உருவாக்கும். இதைத் தவிர்க்க முடியாது.
வரி மீது வரி
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஒன்றிய அரசு தனது பங்கிற்குக் கலால் வரியும், மாநில அரசு தனது பங்கிற்கு மதிப்புக் கூட்டு வரி (VAT) விதித்து வருகிறது.
ஒன்றிய அரசுக்கு வரி
இதன் படி ஒரு லிட்டர் விலை 100 ரூபாய் என்றால் பெட்ரோலுக்கு 58 சதவீதமும், டீசலுக்கு 52 சதவீதம் வரியாகவும் செலுத்த வேண்டியுள்ளது. இந்த 58 ரூபாயில் ஒன்றிய அரசுக்கு 32 முதல் 33 ரூபாய் வரியாக வருமானத்தைப் பெற்று வருகிறது.
வருமானம் முக்கியம்
இந்த வருமானம் அரசுக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குவது மட்டும் அல்லாமல் எண்ணெய் பத்திரங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகைக்காக இந்த வருமானம் ஒருபோதும் இழக்க முடியாத நிலையில் உள்ளது.
3.89 லட்சம் கோடி ரூபாய் வருமானம்
2020-21ஆம் நிதியாண்டில் கலால் வரி வசூல் 62 சதவீதம் உயர்ந்து 3.89 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தக் கலால் வரியில் பெரும் பகுதி எரிபொருள் மீது விதிக்கப்படும் வரி மற்றும் செஸ் தான்.
கடும் கோபம்
இது மக்கள் மத்தியிலும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒன்றிய அரசை பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் எனப் பலதரப்புகளில் இருந்து கோரிக்கை வந்துள்ளது.
அரசுக்கு பெரும் சுமை
மோடி அரசு தற்போது காங்கிரஸ் அரசு வெளியிட்டுள்ள எண்ணெய் பத்திரங்கள் அரசுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க முடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்து வருகிறது.
2026 வரையில் பத்திரம்
எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்த எண்ணெய் பத்திரங்களுக்கு 2026ஆம் ஆண்டு வரையில் வட்டி மற்றும் தொகையைச் செலுத்த வேண்டும். தற்போதைய நிலவரத்தின் படி இன்னும் 1.30 லட்சம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.
இதுதான் தற்போதைய நிலவரம்
மோடி ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைச் சர்வதேச சந்தை அளவீட்டை வைத்துக் கணக்கிடத் துவங்கிய முதல் எண்ணெய் பத்திரங்கள் வெளியிடப்படுவது இல்லை. இதற்கு மாறாக மானியத்தை முழுமையாக நீக்கிவிட்டு மொத்த தொகையும் மக்களிடமே வசூலிக்கப்படுகிறது. இதன் வாயிலாகவே பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது, இந்த உயர்வுக்குக் கலால் வரி அதிகரிப்பும் முக்கியக் காரணம்.