இந்தியாவில் பல பெட்ரோல் பங்குகளில் போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தால் பல பங்க்-கள் மூடப்படும் நிலை ஏற்பட்டது, அதிலும் குறிப்பாகத் தனியார் நிறுவனங்களின் பெட்ரோல் பங்க்-களில் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதனால் மக்கள் இந்தியாவிலும் இலங்கை போன்ற நிலை வந்துவிட்டதா என்று முணுமுணுக்கத் துவங்கினர். இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க மத்திய அரசு எடுத்த முடிவு தான் ஏற்றுமதி எரிபொருள் மீதான வரி விதிப்பை அதிகரிப்பது என்பது.
மத்திய அரசின் வரி உயர்வின் காரணமாக அரசுக்குச் சிறப்பான வருமானம் கிடைக்க உள்ளது. அதேவேளையில் எரிபொருள் ஏற்றுமதியை நம்பியிருக்கும் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்படப் பல எண்ணெய் நிறுவனங்களுக்குப் பெரும் பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது.
நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்தியதுள்ளது. இந்திய மக்களுக்குக் குறிப்பாக ரீடைல் சந்தையில் மக்களுக்குப் போதுமான எரிபொருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருள் மீதான வரியை அதிகரித்தது.
ஏற்றுமதி வரி உயர்வு
மத்திய நிதியமைச்சகத்தின் வாயிலாக வெளியான அறிவிப்பின் படி இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீசல் மீதான வரி லிட்டருக்கு 13 ரூபாய் உயர்ந்துள்ளது, பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது, விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 1 ரூபாய் உயர்த்தப்பட்டது.
94,800 கோடி ரூபாய் வருவாய்
இந்த வரி உயர்வின் மூலம் நடப்பு நிதியாண்டில் மட்டும் மத்திய அரசுக்கு எரிபொருள் ஏற்றுமதி தற்போது இருக்கும் அளவு தொடர்ந்தால் சுமார் 12 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும், அதாவது நடப்பு ஆண்டில் சுமார் 94,800 கோடி ரூபாய் கிடைக்கும் என மூடிஸ் இன்வெஸ்ட்டார்ஸ் சர்வீசஸ் கணித்துள்ளது.
மூடிஸ் இன்வெஸ்ட்டார்ஸ் சர்வீசஸ்
இதேபோல் இந்தியாவின் அன்னிய செலாவணி இருப்பு என்பது வெளிநாட்டுக் கடன்களை அடைக்கும் அளவிற்குப் போதுமானதாக உள்ளது, மேலும் கூடுதல் வருமானம் என்பது மத்திய அரசு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் அறிவித்த குறைப்பு மூலம் ஏற்படும் பாதிப்பை சரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி வரி மற்றும் செஸ் உயர்வு
மத்திய அரசின் ஏற்றுமதி வரி மற்றும் செஸ் உயர்வு உள்நாட்டு எரிபொருள் விலையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. ஆனால் இதேவேளையில் எரிபொருள் ஏற்றுமதியை முக்கிய வர்த்தகமாகக் கொண்டு இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு பெரும் பாதிப்பாக உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இப்புதிய ஏற்றுமதி வரி உயர்வால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களின் வருமானத்தைப் பாதிக்கும், இதனால் காலாண்டு முடிவுகளில் பாதிப்பு ஏற்பட்டு இந்நிறுவனப் பங்குகள் அதிகளவில் சரியக் கூடும். உதாரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் வரி உயர்த்தப்பட்ட ஜூலை 1ஆம் தேதியில் இருந்து 7 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.