இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம், விலைவாசி உயர்வு மற்றும் அதன் மூலம் ஏற்படும் வர்த்தகச் சரிவு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றைச் சரி செய்ய மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் முக்கியமான அறிவிப்புகளையும், மாற்றங்களையும் செய்தது.
இந்த மாற்றத்தின் மூலம் சில நன்மையும் உருவாகியுள்ளது. இதேவேளையில் மக்களைப் பாதிக்கும் சில நிகழ்வும் உருவாகியுள்ளது.
கலால் வரி மற்றும் இறக்குமதி வரி
மத்திய அரசு அறிவித்த கலால் வரி மற்றும் இறக்குமதி வரிக் குறைப்புகள் மூலம் இந்தியாவில் பல முக்கிய வர்த்தகப் பொருட்களின் விலைவாசி குறைந்துள்ளது நாம் பார்க்க முடிகிறது. இதன் மூலம் பணவீக்கத்தில் 35-40 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.35-0.40 சதவீதம் வரையில் குறைக்கலாம் என எஸ்பிஐ வங்கி தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சில்லறை விலை பணவீக்கம்
மே மாதத்திற்கான சில்லறை விலை பணவீக்கம் இந்த வரித் தளர்வுகள் மூலம் ஏற்கனவே வெளியிட்ட கணிப்பை விடவும் 10 அடிப்படை புள்ளிகள் குறைந்து 7.0 சதவீதமாக இருக்கும் என எஸ்பிஐ வங்கி கணக்கிட்டு உள்ளது.
முழுத் தாக்கம்
மத்திய அரசின் கலால் வரி மற்றும் இறக்குமதி வரிக் குறைப்பு நடவடிக்கையின் முழுத் தாக்கமும், பலனும் இனி வரும் மாதங்களில் தான் தெரியும். நடப்பு நிதியாண்டில், சில்லறை வணிக அடிப்படையிலான பணவீக்கம் சராசரியாக 6.5%-6.7% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி
இதேவேளையில் இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி அதிகரிப்பின் மூலம் ரூபாய் மதிப்பை பெரும் சரிவில் இருந்து காப்பாற்றப்பட்டு உள்ளது. ஜூன் நாணய கொள்கை கூட்டத்திலும் வட்டி உயர்வு இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் அறிவித்துள்ள நிலையில் சந்தை முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் முன்கூட்டியே தயாராகியுள்ளனர்.
ரெப்போ விகிதம்
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தை 4.4 சதவீதமாக உயர்த்திய பின்பு அனைத்து வங்கிகளும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதை நாம் பார்த்தோம். ஆனால் பெரும்பாலான வங்கிகள் இந்த வட்டி விகித உயர்வை வைப்பு நிதிகளுக்கு அளிக்கவில்லை.
வைப்பு நிதி
இந்தியாவில் பெரும் பகுதிகள் மக்கள் தொகை வங்கி வைப்பு நிதியை முக்கிய முதலீடாகக் கொண்டு இருக்கும் வேளையில் ஆர்பிஐ வட்டியை உயர்த்திய பின்பும் கடனுக்கு வட்டியை உயர்த்திவிட்டு வைப்பு நிதிக்கு வட்டியை உயர்த்தாமல் இருப்பது சாமானிய மக்களை அதிகளவில் பாதிக்கிறது.