பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மாபெரும் திட்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட 3 விவசாயச் சட்டத்தை, விவசாயிகளின் கடுமையான போராட்டம் மற்றும் உயிர்த் தியாகத்தால் , நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளே திரும்பப் பெற்றது.
இந்நிலையில் அடுத்தடுத்து பல மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது, இதைத் தொடர்ந்து 2024ல் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறார். 2024 பிரதமர் தேர்தலில் மோடி வெற்றிபெற்றால் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி-க்கு அடுத்தபடியாக 3வது முறையாகப் பிரதமராகும் வாய்ப்பை பெறுவார்.
ஆனால் இதை எளிதில் கிடைக்காது என்பது உறுதி, காரணம் மோடி 3வது முறையாகப் பிரதமர் தேர்தலில் வெற்றிபெற 5 முக்கியச் சவால்கள் உள்ளது.
Ease of Doing Business:
வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் வர்த்தகம் செய்ய ஏதுவான சூழ்நிலையைப் பெரிய அளவில் மேம்படுத்த வேண்டிய முக்கியமான சவால் மோடியின் முன் உள்ளது.
இந்தியாவில் கார்ப்பரேட் வரி ஆசியாவிலேயே குறைவாக இருப்பது இந்திய வர்த்தகச் சந்தைக்கு மிகவும் சாதகமாக இருந்தாலும், புதிய முதலீட்டாளர்களையும், நிறுவனங்களையும் ஈர்க்க நாட்டின் உள்கட்டமைப்பு மிகப்பெரிய தடையாக உள்ளது.
மத்திய அரசின் நெடுஞ்சாலை, ரயில், பவர் பிளான்ட் எனச் சுமார் 1680 உள்கட்டமைப்புத் திட்டங்கள் தேக்கத்தில் உள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் கடுமையான வர்த்தகப் பாதிப்பில் இயங்கி வருகிறது. ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு போன்ற பல நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறியும் உள்ளது.
பொருளாதார இலக்கு
கொரோனா காலத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிகளவிலான செலவுகளைச் செய்த நிலையில் நிதியியல் பற்றாக்குறை அளவீட்டை ஜிடிபி அளவில் 6.8 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.
இதே வேளையில் இந்தியாவின் tax-to-GDP அளவீட்டை உயர்த்தவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த இலக்கை அடைய வருடத்திற்கு 1 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அளவிற்கு உற்பத்தி தளத்தை உருவாக்க வேண்டும்.
புவிசார் அரசியல் பிரச்சனைகள்
பாகிஸ்தான் உடனான உறவு நீண்ட காலமாக மோசமான நிலையிலும், ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கையில் இருக்கும் வேளையில் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உள்ளது. இதற்கிடையில் இந்தியா சீனா எல்லையில் சீன தளவாடங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
எல்லை பிரச்சனைகளைத் தீர்க்கவும், அண்டை நாடுகள் உடனான நட்புறவை மேம்படுத்தவும் கட்டாயம் மோடி அரசு 2024க்குள் விரைவாக முடிவு எடுத்தாக வேண்டும் இல்லையெனில் வெற்றி வாய்ப்புக் குறைவு தான்.
பருவநிலை மாற்றம்
உலக நாடுகளைப் பயமுறுத்தி வரும் பருவநிலை மாற்றம் குறித்து இந்தியா தீர்க்கமான முடிவையும், இலக்கையும் அறிவிக்க வேண்டும். இதன் மூலம் ஏற்படும் வர்த்தக மாற்றங்கள் நாட்டின் வளர்ச்சி பொருளாதாரம் பாதிக்காத வண்ணம் திட்டத்தைத் தீர்க்க வேண்டிய முக்கியமான சவால் பிரதமர் மோடியிடம் உள்ளது.
வேக்சின்
இந்தியாவில் இன்னும் கொரோனா வேக்சின் மக்களுக்கு முழுமையாக அளிக்கப்படாமல் உள்ளது. இதற்கிடையில் புதிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் இந்தியாவில் பரவத் துவங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் 3வது அலை உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
வேக்சின் பற்றாக்குறை, வேக்சின் பகிர்வு பிரச்சனைகளைத் தீர்த்து அனைவருக்கும் வேக்சின் பாதுகாப்பை விரைவாக அளிக்க வேண்டிய கட்டாயம் மோடிக்கு உள்ளது.