டெல்லி: இந்திய பொருளாதாரம் எப்படி பயணிக்கிறது, பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, அமெரிக்க பொருளாதார வல்லுனரான நவ்ரியல் ரெளபினி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
2008ம் ஆண்டு, உலகமெங்கும், பொருளாதார பெருமந்தம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே சரியாக கணித்து கூறியது நவ்ரியல் ரௌபினி என்பது கவனிக்கத்தக்கது.
அமெரிக்கா-ஈரான் பதற்றங்கள் குறித்தும், நவ்ரியல் ரெளபினி, தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதுகுறித்து ஒரு தொகுப்பை பாருங்கள்:
பீப்பாய் 100 டாலருக்கு போகக்கூடாது
அமெரிக்க-ஈரான் பதட்டங்கள் முடிந்துவிட்டன என்று நம்புவது அப்பாவித்தனமான கருத்து. அதேநேரம், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு, $100க்கு உயரும் வரை, பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று நான், எதிர்பார்க்கவில்லை. அமெரிக்க-ஈரான் பதட்டங்கள் முடிந்துவிடவில்லை. முழு அளவிலான போர் நடைபெற்றால், ஆயில் விலைகள் பீப்பாய்க்கு 100 டாலருக்கு மேல் சென்றால், பொருளாதார மந்த நிலை ஏற்படும் வாய்ப்பு உண்டு.
பொருளாதார மந்தநிலை
ஹார்முஸ் ஜலசந்தியில் ஆயில் போக்குவரத்து, தடைசெய்யப்பட்டால், அல்லது ஆயில் குழாய்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டால், அமெரிக்காவிலும், உலக அளவிலும் பொருளாதார மந்தநிலை ஏற்படும். டிரம்ப் அதை விரும்பவில்லை. எனவேதான் முழு அளவிலான யுத்தத்தை நடத்தப்போவதில்லை என்று ட்ரம்ப் நினைக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிதிக்கொள்கை
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பலவீனமடைந்து வருகிறது, பொருளாதாரத்தை தூண்டுவது குறித்த உங்கள் கருத்து என்ன என்ற நிருபர்கள் கேள்விக்கு,
நவ்ரியல் ரெளபினி பதில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மிக முக்கியமான விஷயம் நிதிக் கொள்கை அல்லது நிதியியல் கூட அல்ல. ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஐந்து முறை ரெப்போ வீதங்களைக் குறைத்துள்ளது, ஆனால் யதார்த்த நிலைக்கு, இந்த நிதிக் கொள்கையை கடத்துவது பலவீனமாக உள்ளது. தேவைப்படும் வளர்ச்சியை அதிகரிக்க, பரந்த அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை.
பிரபல திட்டங்கள்
உங்கள் 'வலுவான பிரதமர்', நிஜமான பொருளாதார பிரச்சினைகளில் இருந்து தனது பார்வையை விலக்கிவிட்டார். குறுகிய காலத்தில் அவரை பிரபலப்படுத்தக்கூடிய அரசியல் விஷயங்களுக்கான திட்டங்கள்தான், பொருளாதார கொள்கைகளில் இடம் பிடிக்கின்றன. இது பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறது.
பெரிய விஷயங்கள் தேவை
ஒரு விஷயத்தை பிரதமர் கவனிக்க வேண்டும். பொருளாதாரம் வீழ்ச்சியடையப் போகிறது என்றால், அவரது புகழ் குறையப் போகிறது என்றுதான் அர்த்தம். அப்போது குறுகியகால புகழ் விஷயங்களை மக்கள் மறந்துவிடுவார்கள். செய்ய வேண்டிய விஷயம் பெரிய அளவிற்கு உள்ளது. அதில்தான் அவர் கவனம் வைக்க வேண்டும். கடன் அமைப்பு மற்றும் தொழிலாளர் சந்தை சீர்திருத்தம், நில சீர்திருத்தம், புதுமை, விவசாய நிர்ணயங்கள், தொழிலாளர்களின் வருமானம், உள்கட்டமைப்பு கொள்கைகள் ஆகியவற்றை சரிசெய்ய வேண்டியது முக்கியம். இவ்வாறு நவ்ரியல் ரெளபினி தெரிவித்தார்.