இந்திய முதலீட்டுச் சந்தையில் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் போலவே முதலீட்டு வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் மொத்த முதலீட்டுச் சந்தையும் தற்போது புதிய பரிமான வளர்ச்சியை நோக்கி வளர்ந்து வருகிறது என்றால் மிகையில்லை.
அந்த வகையில் ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ள 2 புதிய திட்டத்தைப் பிரதமர் மோடி நவம்பர் 12ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளார். இதில் முக்கியமாக ரீடைல் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது ரிசர்வ் வங்கியின் ரீடைல் டைரெக்ட் ஸ்கீம் தான்.
அரசு பத்திர முதலீடுகள்
இந்தியாவில் 100 சதவீதம் பாதுகாப்புடன் இருக்கும் முதலீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில், நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும், முதலீட்டாளர்களின் லாபத்திற்கு ஆபத்து இல்லாமல் இருக்கும் ஒரு முக்கியமான திட்டம் அரசு பத்திர முதலீடுகள் தான். ஆனால் அதில் ரீடைல் முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்ய முடியாமல் இருந்தது.
ரீடைல் முதலீட்டாளர்கள்
இந்நிலையில் ரீடைல் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்வது போல் அரசு பத்திரத்திலும் முதலீடு செய்ய வாய்ப்பு அளிக்கும் திட்டம் தான் இந்த ரிசர்வ் வங்கியின் ரீடைல் டைரெக்ட் ஸ்கீம். இதன் மூலம் ஒருவர் நேரடியாக அரசு பத்திரத்தில் முதலீடு செய்யலாம்.
ரிசர்வ் வங்கி ஆன்லைன் தளம்
இதற்காக ரிசர்வ் வங்கி ஆன்லைன் தளத்தில் பதிவு செய்பவர்களுக்கு ரீடைல் டைரெக்ட் கிளிட் அக்கவுன்ட் திறக்கவும், நிர்வாகம் செய்யும் வசதியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ஒருவர் அரசு வெளியிடும் பத்திரத்தில் நேரடியாக முதலீடு செய்து லாபம் பெற முடியும்.
ரிசர்வ் வங்கியின் IOS
இந்த முக்கியமான திட்டத்துடன் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்தும் வகையில் IOS என்ற புதிய கட்டமைப்பையும் அறிமுகம் செய்ய உள்ளது. Integrated Ombudsman Scheme என்ற தளத்தில் வங்கி மற்றும் NBFC அமைப்புகள் எதிராகக் குவியும் புகார்களைத் தீர்க்கவும் விசாரணை செய்யவும் உருவாக்கப்பட்டு உள்ளது.
3 அமைப்புகள்
தற்போது இந்தியாவில் 3 அமைப்புகள் தனித்தனியாக வங்கி மற்றும் NBFC அமைப்புகள் எதிராகக் குவியும் புகார்களைத் தீர்க்க இயங்கி வருகிறது. இதை வலிமையாக்க ரிசர்வ் வங்கி 3 அமைப்புகளையும் ஒன்றாக இணைத்து One Nation one Ombudsman என்ற கொள்கையின் கீழ் இயங்கி பணிகளை வேகப்படுத்த உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி
ரிசர்வ் வங்கியின் இந்த ரீடைல் டைரெக்ட் ஸ்கீம் மற்றும் Integrated Ombudsman Scheme ஆகிய இரு திட்டத்தையும் நவம்பர் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். அரசு பத்திர முதலீட்டில் ரீடைல் முதலீட்டாளர்களுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு மிகப்பெரியதாகப் பார்க்கப்படுகிறது.