மும்பை, மகாராஷ்டிரா: இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாகவே, பல்வேறு பிரச்னைகள் ஓடிக் கொண்டு இருக்கின்றன. இதனால் பங்கு விலையில் இறக்கம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சலீல் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி நிலஞ்ஜன் ராய் ஆகியோர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் மொட்டைக் கடிதங்கள் குறிப்பிடத்தக்கவை.
இந்த பிரச்னைகளுக்கு பதில் கொடுக்கும் விதத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நந்தன் நிலக்கனி, பல முறை பேசி இருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் சொன்ன வார்த்தைகள் கொஞ்சம் பலமான சர்ச்சையைக் கிளப்பி இருக்கின்றன.
பேச்சு
கடந்த நவம்பர் முதல் வாரத்தில், இன்ஃபோசிஸ் நிறுவன தலைவர் நந்தன் நிலக்கனி ஒரு அனலிஸ்டுகள் கூட்டத்தில் பேசினார். அப்போது தான் "கடவுளே வந்தாலும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கணக்குகளை மாற்ற முடியாது" எனச் சொன்னார். அதோடு இதுவரை வந்த புகார்களை, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தணிக்கை குழு விசாரித்துக் கொண்டு இருப்பதாகவும் சொல்லி இருந்தார்.
மோகன் தாஸ் பய்
தற்போது இன்ஃபோசிஸ் தலைவராக இருந்து நிறுவனத்தை வழி நடத்திக் கொண்டு இருக்கும் நந்தன் நிலக்கனி பேசிய பேச்சை... "உணர்ச்சிகரமாக, கடவுளை இழுத்துப் பேசி, கம்பெனி மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை சரி செய்யக் கூடாது" என விமர்சித்து இருக்கிறார் முன்னாள் இன்ஃபோசிஸ் நிறுவன முதன்மை நிதி அதிகாரி மோகன் தாஸ் பய்.
புகாரைப் பற்றிய கவலை
சமீபத்தில், முன்னாள் செபி தலைவர் தாமோதரன் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சி ஒன்றில் "இன்ஃபோசிஸ் நிறுவனம் இதை எல்லாம் செய்து இருக்கிறோம், இந்த விதிமுறைகளை எல்லாம் பின்பற்றிக் கொண்டு இருக்கிறோம்... என வெறுமனே ஒரு ஸ்டேட்மெண்டை கொடுக்கக் கூடாது. ஏன் என்றால் மக்கள், இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது எழுந்த புகாரைப் பற்றி கவலையில் இருக்கிறார்கள் எனச் சொல்லி இருக்கிறார் மோகன் தாஸ் பய்.
உடனடி நடவடிக்கை
நிறுவனத்துக்குள் நடக்கும் பாலியல் தொடர்பான புகார்கள், உயர் அதிகாரிகளின் நடத்தை தொடர்பான புகார்கள், பணப் பரிமாற்றம் சார்ந்த புகார்களுக்கு முன்னுரிமை கொடுத்த விரைவாக தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அழுத்தமாக வலியுறுத்தி இருக்கிறார் முன்னாள் இன்ஃபோசிஸ் ஊழியர் மோகன் தாஸ் பய்.
செபி தலைவர்
"நந்தன் நிலக்கனியைக் கேளுங்கள் அல்லது கடவுளைக் கேளுங்கள்... முதலீட்டாளர்கள் தங்கள் முடிவுகளை எடுக்கட்டும். செபி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு இருக்கிறது" என இந்திய பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்திக் கொண்டு இருக்கும், செபி அமைப்பின் தலைவர் அஜய் தியாகி கூட, நந்தன் நிலக்கனியின் வார்த்தைகளை விமர்சித்து இருக்கிறார்.
கொஞ்சம் வரலாறு
கடந்த அக்டோபர் மாதத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி இ ஓ சலீல் பரேக் சுமார் 350 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, சலீல் பரேக் இன்ஃபோசிஸ் நிறுவன சட்டங்கள் படி பெங்களூரில் இருந்து தான் செயல்பட வேண்டும். ஆனால் அவர் மும்பையில் இருந்து தான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார் என புகார்கள் எழுந்தது.
ஊழியர்கள்
இந்த புகார்களை எல்லாம், பெயர் குறிப்பிட விரும்பாத இன்ஃபோசிஸ் ஊழியர்கள், இன்ஃபோசிஸ் இயக்குநர் குழுவுக்கு அனுப்பியதாகச் சொல்லப் பட்டது. அதற்கு இன்ஃபோசிஸ் நிறுவன தரப்பும், தனிப்பட்ட விசாரணை நடத்திக் கொண்டு இருப்பதாக பதில் கொடுத்து இருக்கிறது. விசாரணை முடிந்த பின் விவரங்கள் வெளியிடப்படும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.