தமிழக அரசின் வருவாயை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை வழங்க அமைக்கப்பட்ட மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான வருவாய் உயர்வு குழு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்து பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமைந்து 3 மாதங்கள் முடிந்துள்ளன. அண்மையில் மாநில பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே மாநில அரசுக்கு நிதி பற்றாக்குறை இருக்கும் நிலையில் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த போதிய வருவாய் இல்லாததால் மாநிலத்தின் வருவாயை பெருக்க அரசு திட்டமிட்டது. இதற்காக மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் விஜய் அரசு குழு அமைத்தது.

இந்த குழுவினர் அண்மையில் மக்களின் யோசனைகளையும் கேட்டிருந்தனர். இந்நிலையில் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான குழு முதலமைச்சர் விஜயை சந்தித்துள்ளது. இந்த சந்திப்பின்போது, வருவாயை அதிகரிப்பதற்கான ஐந்து அம்ச அணுகுமுறை குறித்து இந்த குழு விளக்கமளித்துள்ளது. வருவாய் நிர்வாகத்தில் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரி வசூலை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என இந்த குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் வரி ஏய்ப்புகளை கண்டறிந்து அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட வேண்டும். அடுத்ததாக தற்போது அரசு ஈட்டும் வருவாய்க்கும், ஈட்டக்கூடிய சாத்தியமான வருவாய்க்கும் உள்ள இடைவெளியை கண்டறிந்து, அதை சரிசெய்வதற்கான வழிகள் ஆராயப்பட வேண்டும், என யோசனை தெரிவித்துள்ளது.
அடுத்ததாக வருவாய் ஈட்டுவதில் மற்ற மாநிலங்கள் பின்பற்றும் சிறந்த நடைமுறைகளை ஆய்வு செய்து, தமிழகத்திற்கு ஏற்ற வகையில் அவற்றை செயல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாம. குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் வருவாயை அதிகரிக்கக்கூடிய திட்டங்கள் முன்மொழியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
மாண்டேக் சிங் தலைமையிலான குழுவினர், வணிக வரி, பதிவுத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை , போக்குவரத்து, புவியியல் மற்றும் சுரங்கம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் நகர ஊரமைப்புத் துறை ஆகிய முக்கிய வருவாய் ஈட்டும் துறை அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தினர்.
இந்த துறைகளில் தற்போதுள்ள வருவாய் வசூல் நிலவரம், நிர்வாகக் கட்டமைப்பு, தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் வரி ஏய்ப்பு, நிர்வாகத் தடைகள் போன்ற சவால்கள் குறித்தும் அப்போது கேட்டறிந்துள்ளனர். இதனை தொடர்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டிய காலக்கெடு மற்றும் பிற பங்குதாரர்களுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆலோசனைகள் குறித்து இக்குழுவினர் விவாதித்தனர்.
பொதுமக்களிடமிருந்தும், பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்தும் வருவாய் வளர்ச்சி குறித்த ஆலோசனைகளை இந்த குழு ஏற்கனவே பெற்றுள்ளது.இந்த கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்களான நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் தலைமை செயலாளர் எம். சாய் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications

