இந்தியாவுக்கு இது போதாத காலமே. தொடர்ந்து அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் பொருளாதார ரீதியாக மட்டும் பெரும் அடி வாங்கிக் கொண்டிருந்த நிலையில், கொரோனா வைரஸால் மக்களும் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
எங்கே வெளியே சென்றால் தமக்கும் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தினை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
அப்படியே அதனையும் மீறி வெளியில் அத்தியாவசிய பொருட்களுக்காக செல்லும் போது ஆங்காங்கே எங்கேனும் ஒருவர், அதிலும் முகத்தில் மாஸ்க், கையில் கையுறை என ஒருசில மக்களே வருகிறார்கள். ஒரு நிமிடம் இது இந்தியா தானா? தமிழகம் தானா என்ற எண்ணம் வருகிறது. ஏனெனில் நாம் வாழ் நாளில் காண முடியாத அமைதி நம் நாட்டில் நிலவி வருகிறது.
இந்தியாவுக்கு பாதிப்பு
புயலுக்கு பின் அமைதி என்பார்கள். ஆனால் இங்கு அமைதியே ஒரு புயலை போல் தான் இருந்து வருகிறது. ஏனெனில் புயலுக்கு பின்னால் வரும் பெருத்த சேதங்களை எவ்வாறு கணக்கிடுவது கஷ்டமோ? அதே போல் தான் கொரோனாவில் என்னென்ன பிரச்சனைகளை இன்னும் இந்தியா சந்திக்க வேண்டியுள்ளதோ தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இதனால் இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு உள்ளது என்பதை மட்டும் உணர முடிகிறது.
நிதித்துறையில் பிரச்சனை
பொதுவாக எந்தவொரு இயற்கை பேரிடராக இருந்தாலும் சரி, பிரச்சனையினாலும் சரி அதனால் முதலில் பாதிக்கப்படுவது நிதித்துறை தான். இந்த நிதித் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் வங்கித்துறை பற்றித் தான் நாம் இந்தக் கட்டுரையில் பார்க்க போகிறோம். ஏனெனில் கொரோனாவின் தாக்கத்தினால் பாதிக்கப்படும் முக்கிய துறைகளில் ஒன்று இந்திய வங்கித் துறையும் ஒன்று.
வங்கிகளின் தரம் குறைப்பு
கொரோனாவின் தாக்கத்தினால் வங்கிகளின் தரத்தினை stable என்ற நிலையிலிருந்து negative என்ற நிலைக்கு மாற்றியுள்ளது தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ். ஏனெனில் கொரோனாவினால் இந்திய வங்கிகளின் சொத்து மதிப்பு சரியக் கூடும். வாராக்கடன் அதிகரிக்கக் கூடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் மூலதனம் குறைய வாய்ப்புள்ளது.
நிறுவனங்கள் மூடல்
கொரோனாவினால் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் குடிசை தொழில் முதல் கொண்டு பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் நிறுவனங்கள் வருவாயினை இழந்துள்ளதோடு, தங்களது மூலதனத்தினையும் இழக்க நேரிட்டுள்ளது. இதனால் அவை வங்கிகளில் வாங்கியிருந்த கடனை சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் பிரச்சனைக்கு உள்ளாக நேரிடும்.
மந்த நிலையை அதிகரிக்கும்
இதனால் இந்தியா வங்கிகளின் நேர்மறையான கண்ணோட்டத்தினை நாங்கள் எதிர்மறையாக மாற்றியுள்ளோம் என்றும் மூடிஸ் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் இந்தியா பொருளாதாரத்தில் மந்த நிலையினை மேலும் அதிகரிக்கும் என்றும் மூடிஸ் கூறியுள்ளது.
வேலையின்மை அதிகரிக்கும்
பொருளாதாரத்தில் ஏற்படும் வீழ்ச்சியினால் வேலையின்மை அதிகரிக்கும். இது வீட்டு நிதி மற்றும் கார்ப்பரேட் நிதி மோசமாக காரணமாக வழிவகுக்கும். இதன் விளைவாக வாரக்கடன் அதிகரிக்கும். இது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடையே வளர்ந்து வரும் கடன் மன அழுத்தம், வங்கிகளின் சொத்து தரத்திற்கு அபாயங்களை அதிகரிக்கும். மோசமடைந்து வரும் இதன் நிதி அழுத்தம், வங்கிகளின் மூலதனத்தினை பாதிக்கும் என்றும் மூடிஸ் கூறியுள்ளது.