டெல்லி: நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவின் தாக்கம் இன்னும் என்னவெல்லாம் செய்யுமோ தெரியவில்லை. ஏற்கனவே நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அளவு பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 11.5 சதவீதமாக சரியலாம் என மூடிஸ் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
ஏனெனில் இந்தியாவின் கடன் வளர்ச்சியானது குறைவாகவே காணப்படுகிறது. அதோடு அதிகளவிலான கடன் பிரச்சனையும், மோசமான நிதி நெருக்கடி என பலவும் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. ஆக இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்படும் ஆழ்ந்த அழுத்தங்கள் இன்னும் மோசமான நிலைக்கு வழிவகுக்கும் என்றும் மூடிஸ் தெரிவித்துள்ளது. எப்படி இருப்பினும் 2022ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 10.6% வளர்ச்சி காணும் என்றும் இந்த ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
இதே மற்ற ஆய்வு நிறுவனங்களான இந்தியா ரேட்டிங்ஸ் நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 11.8% சரியலாம் என்று கூறியிருந்தது. இதே அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 10.5 சதவீதம் குறையலாம் எனவும் கணித்திருந்தது. இதற்கிடையில் தற்போது மூடிஸ் நிறுவனமும் தன் பங்கிற்கு 11.5% சரியலாம் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது நுகர்வு உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சி குறிகாட்டிகள், மிகவும் பலவீனமான பொருளாதார மீட்சியை நோக்கிச் செல்கின்றன. அதோடு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரையில் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்புவது கஷ்டம் என இந்தியா ரேட்டிங்ஸ் நம்புவதாகவும் தெரிவித்திருந்தது.
அதோடு கொரோனாவினால் பொருளாதாரம் மட்டும் சீர்குலையவில்லை. அதோடு பல ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைகளிலும் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது அமைப்புசாரா தொழில்துறையில் இதன் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இது மிகப்பெரிய வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. புலம் பெயர் தொழிலாளர்கள் நகர்புறங்களுக்கு திரும்புவதற்கான சில சான்றுகள் இருந்தாலும், செயல்முறை மிக மெதுவாக இருக்க வாய்ப்புள்ளதாக இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்திருந்தது.
இதே மார்கன் ஸ்டான்லி நிறுவனம் நடப்பு ஆண்டில் (காலாண்டர் ஆண்டு) இந்தியாவின் வளர்ச்சி 5% சுருங்கலாம் என கூறியுள்ளது. இதே 2021ம் ஆண்டில் 9.5% ஆக மீட்சி காணலாம் எனவும் தெரிவித்துள்ளது.
உண்மையில் நிலவி வரும் நெருக்கடியான நிலையினால், இது நிச்சயமற்ற ஒரு நிலையாகவே பார்க்கப்படுகிறது. எனினும் இது எல்லா கணிப்புகளும் சொல்லும் ஒரே விஷயம் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி காணும் என்பது.