இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது.
நாடு முழுவதும் லாக்டவுனால் முடங்கி போயுள்ள நிலையில், ஏற்கனவே முடங்கியுள்ள பொருளாதாரம் மேலும் சரியும் என மூடிஸ் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் 2020ம் காலண்டர் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை 2.5% ஆகக் குறைத்துள்ளது மூடிஸ்.
வளர்ச்சி குறைப்பு
இதற்கு முன்பு இந்த நிறுவனம் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தினை 5.3% கணித்திருந்தது. ஆனால் தற்போது நாட்டில் நிலவி வரும் மந்த நிலை மற்றும் முடக்கத்தினால் பொருளாதாரம் மேலும் சரியும் என்றும் கணித்துள்ளது. அதோடு சர்வதேச அளவில் கொரோனா தாக்கத்தினால் உலகப் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியைக் காணலாம் என கணித்துள்ளது.
வளர்ச்சி எப்போது?
மேலும் நடப்பு 2020 - 2021-க்கான உலகப் பொருளாதார பார்வையில் மூடிஸ் நிறுவனம் இந்தியா தனது வருவாயில் இழப்பினை சந்திக்ககூடும் என்றும் கணித்துள்ளது. இது மட்டும் அல்ல மீண்டும் 2021-ல் ஆண்டில் தேவை அதிகரிக்கலாம். அப்போது பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்குத் திரும்பலாம் என்று மூடிஸ் கூறியுள்ளது.
முழு அடைப்பு
இந்தியாவில் பொருளாதாரத்தில் ஏற்கனவே பணப்புழக்கக் குறைபாடுகளினால் வங்கி மற்றும் வங்கியல்லாத நிதித்துறைகளில் பெரிய அளவில் கடன் அளிப்பது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தற்போது கொரோனா தாக்கத்தினை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் 3 வார கால முழு அடைப்பு செய்யப்பட்டுள்ளது.
தாக்கம் இன்னும் அதிகரிக்கலாம்
இன்னும் இதை குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் மிக அத்தியாவசியமான பொருட்கள் கூட குறிப்பிட்ட கால நேரம் வரை தான் விற்க அனுமதிக்கப்படுகின்றது. இந்த நிலையில் கொரோனாவின் தாக்கத்தினால் 20 பேர் வரை பலியாகியுள்ளனர். இங்கு 700 பேருக்கும் மேல் தாக்கம் அடைந்துள்ள நிலையில் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
உலகளவில் பாதிப்பு
உலக அளவில் இது வரை 24,000 பேருக்கும் மேல் பலியாகியுள்ள நிலையில், உலகம் முழுக்க 5 லட்சத்துக்கு மேல் இதன் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகம் முழுக்க லாக்-டவுன் காரணமாக அனைத்து வர்த்தகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல லட்சம் பேர் தற்காலிக தங்களது வேலையினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகப் பொருளாதாரம் குறையும்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் உலகப் பொருளாதாரமே 2020-ல் வளர்ச்சி குறைவைக் காணலாம் என்கிறது மூடிஸ். ஆனால் மீண்டும் 2021-ல் வளர்ச்சி தொடங்கும் என்றும் கூறியுள்ளது. இது 2020ல் ஜிடிபி 0.5% குறையும் என்றும், 2021-ல் 3.2% ஆக அதிகரிக்கலாம் என்றும் மூடிஸ் மதிப்பிட்டுள்ளது.
பல சலுகை
மேலும் அடுத்த சில மாதங்களில் வேலையிழப்புகள் பல உலக நாடுகளிலும் அதிகரிக்கும், இதிலிருந்து மீள்வது என்பது வேலையிழப்புகள், வர்த்தக இழப்புகள் ஆகியவை நிரந்தரமா, அல்லது தற்காலிகமா என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். இந்த நிலையில் வரிச்சலுகை, பணப்பரிமாற்றம், கடன் தள்ளுபடிகள், வர்த்தகங்களுக்கு மானியங்கள், வங்கிக்கடன்களுக்கு அரசு உத்தரவாதம் போன்ற நிதி ரீதியான சலுகைகளை பல நாடுகளும் அறிவித்து வருகின்றன.
ஏழை எளிய மக்களுக்கு நிதி
இந்திய அரசு கடந்த வியாழக்கிழமையன்று 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதியினை ஏழை மக்களுக்காக ஒதுக்கியுள்ளது. இதில் எழை மக்களுக்கு நிதி, இலவச உணவுப்பொருள், ஏழைகளுக்குப் ரொக்க உதவி, மகளிருக்காக சில அதிரடியான அறிவிப்புகள் என பல திட்டத்தினை அடுத்த 3 மாதங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
கணிக்க முடியாது
கொரோனா வைரஸ் நெருக்கடியின் பொருளாதார பாதிப்புகளை கணிக்க முடியவில்லை. ஏனெனில் மறைமுகமாக இதில் பல அறிய முடியாதவையும் உள்ளன. ஆக இந்த வைரஸை கட்டுப்படுத்த இன்னும் எத்துனை மாதம் பிடிக்குமோ. ஆக எத்தனை காலம் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்பவை அறிய முடியாதவை என்றும் மூடிஸ் அறிவித்துள்ளது.