டெல்லி: நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டே இருக்கிறது எனலாம்.
ஏனெனில் கொரோனா லாக்டவுன் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கியுள்ளது. தற்போது சிறிது தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் முழுமையான அளவு தொழிற்சாலைகள் இயங்கவில்லை.
இதற்கிடையில் தான் மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தான மதிப்பீட்டினை குறைத்து வருகின்றன.
இந்தியாவின் வளர்ச்சி
மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் மதிப்பீட்டு நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தினை 2021ம் நிதியாண்டில் பூஜ்ஜியமாக மதிப்பிட்டுள்ளது. சரிந்து வரும் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க குறுகிய வாய்ப்புகள் மட்டுமே உள்ளது, இதனால் மந்தமான வளர்ச்சியே நீடிக்கக் கூடும். கொரோனாவின் நோய் பரவலைக் கட்டுப்படுத்த, லாக்டவுன் நீண்ட காலமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனால் பொருளாதாரம் பின்னோக்கி செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.
வேலையின்மை அதிகரிப்பு
இது நாட்டினை கடுமையாக பாதிக்கப்படக்கூடும். இந்தியாவின் வேலையின்மை விகிதம் மே 3 முதல் வாரத்தில் 27.1% ஆக அதிகரித்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 121.5 மில்லியன் இந்தியர்கள் வேலைகளை இழந்துள்ளனர் என்று இந்திய பொருளாதாரத்தின் கண்கானிப்பு மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூண்டுதல் நிதி தேவை
இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலையிழப்பினை தடுக்கவும், மக்களை பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளைப் பாதுகாப்பதற்கும், பொருளாதாரத்தினை தூண்டுவதற்கும் ஒரு பெரிய அளவிலான தூண்டுதல் நிதி தேவைப்படுகிறது. ஆனால் தற்போது இந்தியா இருக்கும் நிலையில், அந்த பெரிய நிதியினை எப்படி திரட்ட போகிறது என்பது தான் கேள்விக்குறியாகவே உள்ளது.
வங்கிகள் கடுமையாக பாதிக்கும்
இதே எஸ் & பி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிய பசிபிக் பகுதியில் இந்தோனேசியா மற்றும் இந்தியாவின் வங்கி அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதோடு முழுமையாக லாக்டவுன் காரணமாக வணிகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தேவை குறைந்து வருவது பொருளாதாரத்தினை மேற்கொண்டு பாதிக்கும் என்றும் கூறியுள்ளது.
வளர்ச்சியில் வீழ்ச்சி
இது நடப்பு ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் கூர்மையான சரிவு ஏற்படலாம். செயல்படாத சொத்துக்களின் மதிப்பும் அதிகரிக்கலாம் என்று எஸ் & பி அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆக இந்தியா கொரோனா அழுதத்திற்கும் மத்தியில் இந்தியா பல்வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. ஆக இது இந்தியாவின் வளர்ச்சியினை கணிசமாகக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.