மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் நிறுவனம் பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வங்கியான எஸ்பிஐ மற்றும் ஹெஸ்டிஎஃப்சி வங்கிகளுக்கு நீண்டகால டெபாசிட்களுக்கும், வெளி நாட்டு நாணய வைப்பு நிதி குறித்த தர மதிப்பீடுகளையும் குறைத்துள்ளது.
பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளின் நீண்டகால வைப்பு நிதி குறித்த தர மதிப்பீட்டினையும் பரிசீலனைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் இறையாண்மை பத்திரங்களுக்கான தர மதிப்பீட்டினையும் Baa2 விலிருந்து Baa3 ஆக குறைத்த அடுத்த நாள், இந்த வங்கிகளுக்கான தரக் குறியீடுகளையும் குறைத்து மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்?
இது குறைந்த வளர்ச்சியின் காரணமாகவும், தற்போது நிலவி வரும் சவாலான நிலைகளையும் சுட்டி காட்டி இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளது மூடீஸ் நிறுவனம். வங்கிகளின் தர மதிப்பீட்டினை குறைப்பதும், இந்தியாவின் தர மதிப்பீட்டினை குறைப்பதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பத்திர தர மதிப்பு குறைப்பு
கொரோனா வைரஸின் காரணமாக இறையாண்மை பத்திரங்களின் தர மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலீடுகள் குறையலாம். பொருளாதார சீர்குலைவு ஏற்படலாம். ஆக இன்றைய நடவடிக்கைகளுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. ஏனெனில் கொரோனா காரணமாக இந்திய பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவினை சந்தித்துள்ளது. இதனால் இந்திய வங்கித் துறைகளும் பலவீனமடைந்துள்ளன என்றும் மூடிஸ் தெரிவித்துள்ளது.
லிஸ்டில் 11 வங்கிகள்
ஆக மொத்தத்தில் மூடிஸ் தற்போது 11 வங்கிகளின் மீது மதிப்பீட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த லிஸ்டில் இன்டஸ்இந்த் பேங்க் மற்றும் எக்ஸிம் வங்கிகளின் தர மதிப்பீட்டினை குறைத்துள்ளது. இதே பஞ்சாப் நேஷனல் பேங்க் கண்ணோட்டத்தினை நிலையானது என்பதிலிருந்து நேர் மறையாக மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
பிரச்சனை தான்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் பல பொதுத்துறை வங்கிகளின் தரக்குறியீட்டினையும் தரமிறக்கவுள்ளதாகவும் மூடிஸ் கூறியுள்ளது. ஏற்கனவே வாராக்கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் வங்கிகள், இந்த தர குறைப்பால் இன்னும் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்குமோ தெரியவில்லை.
அதிலும் இந்த கொரோனா இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ தெரியவில்லை..