இந்தியாவின் பணவீக்கம் மற்றும் நாணய மதிப்புச் சரிவு பொருளாதாரத்திற்குப் பெரும் பாதிப்பாக இருக்கும் வேளையில், நாணய கொள்கை கூட்டம் வரையில் காத்திருக்காமல் இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்காவுக்கு முன்னதாக அவசர அவசரமாக ரெப்போ விகிதத்தை உயர்த்திப் பெரிய அளவிலான அன்னிய செலாவணி வெளியேற்றத்தைத் தடுத்தது.
ஆனால் இன்னும் ரூபாய் மதிப்பு தனது வரலாற்றுச் சரிவின் அருகில் இருந்து வெளியேறவில்லை. இதனால் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி உயர்வு கட்டாயம் இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி வரும் மாதங்களில் நாணய கொள்கை விகிதங்களை மேலும் உயர்த்தப்படும் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் திங்கள்கிழமை தெரிவித்தார், மேலும் எந்த வேளையிலும் ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
வட்டி விகிதம்
வட்டி விகித உயர்வுக்குத் தற்போது எந்தத் தடையும் இல்லை, ஜூன் மாத நாணய கொள்கை கூட்டத்தில் பணவீக்கம் அளவுகளின் கணிப்புகள் முன்வைத்து வட்டி உயர்வுக்கான இறுதி முடிவுகள் எடுக்கப்படும்.
5.15 சதவீதம் வரை
இக்கூட்டத்தில் வட்டி உயர்வு இருக்கும், உறுதியாகச் சொல்லாவிட்டாலும் தோராயமாக 5.15 சதவீதம் வரையில் ரெப்போ விகிதம் உயர்த்தப்படலாம் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சக்திகாந்த தாஸ்
இந்த வட்டி உயர்வு மூலம் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை கொண்டு வர முயற்சிக்கப்படும், ஆனால் எப்போது முழுமையாகக் கொண்டு வர முடியும் என்பது தற்போது கணிக்க முடியாது என்றும் விளக்கியுள்ளார்.
நடப்பு கணக்குப் பற்றாக்குறை
மே மாதம் ஆர்பிஐ ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 4 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக உயர்த்தியது. மேலும் மத்திய அரசும், ஆர்பிஐ-யும் இணைந்து நடப்பு கணக்கு பற்றாக்குறையை 6.4% கீழ் வைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது எனவும் சக்திகாந்த தாஸ்.
ஈஎம்ஐ அதிகரிக்கும்
ஜூன் நாணய கொள்கையில் ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை உயர்த்தினால் வீட்டுக் கடன், வாகன கடன், பர்சனல் லோன், தங்க கடன் போன்ற அனைத்து கடனுக்குமான வட்டி விகிதம் உயரும். இதனால் வாயிலாக மாதாமாதம் செலுத்தும் ஈஎம்ஐ தொகையும் அதிகரிக்கும். ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வட்டி உயர்வு குறித்து உறுதியாக இருக்கும் நிலையில் மக்கள் கூடுதலாக ஈஎம்ஐ செலுத்த தயாராக இருக்க வேண்டும்.